என் மலர்
புதுச்சேரி

ஒலிம்பியாட் போட்டி வரவேற்பு விளம்பரங்களில் பிரதமரின் படத்தை வைக்க வேண்டும்- கவர்னர் தமிழிசை கோரிக்கை
- விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்களை கொண்ட கல் வெட்டு பதியப்படுகிறது.
- தமிழக முதல்-அமைச்சர் அண்ணன் ஸ்டாலின் பரந்த மனப்பான்மையுடன் பிரதமர் படங்களை வைக்க வேண்டும்.
புதுச்சேரி:
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவை கடற்கரை சாலை காந்தி திடலில் தியாக சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்களை கொண்ட கல் வெட்டு பதியப்படுகிறது. இன்று காலை கவர்னர் தமிழிசை கல்வெட்டுகளை பதித்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா வீர சாவர்க்கார், திருநெல்வேலி வேலு நாச்சியார் ஆகியோரின் கல்வெட்டுகளை தமிழிசை பதித்தார்.
தொடர்ந்து கல்வெட்டை சுற்றி வரையப்பட்டுள்ள விடுதலை போராட்ட வீரர்களின் ஓவியங்களை தமிழிசை பார்வையிட்டார். அவற்றில் வீரர்களின் பெயர்களை பதிவிட வேண்டும் என தமிழிசை அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தியாக சுவர் குழந்தைகளுக்கு தேச உணர்வை ஊட்ட வேண்டும், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.
புதுவையில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசு திட்டங்களை தீட்ட வேண்டும். தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் வருவது மகிழ்ச்சிக்குரியது.
இதில் எனக்கு ஒரு ஆதங்கம் உள்ளது. போட்டிக்கான வரவேற்பு விளம்பரங்களில் பிரதமரின் படமில்லை. தமிழக முதல்-அமைச்சர் அண்ணன் ஸ்டாலின் பரந்த மனப்பான்மையுடன் பிரதமர் படங்களை வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவரிடம் நிருபர்கள், தமிழிசை தன்னிச்சையாக செயல்படுகிறார் என நாராயணசாமி கூறியுள்ளாரே? என கேட்டபோது, நான் தன்னிச்சையாக செயல்படவில்லை. தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறேன். நான் எங்கே பொய் சொன்னேன் என தேடித்தான் பார்க்க வேண்டும். நான் மெய்யாக வேலை செய்கிறேன். தீயாய் வேலை செய்கிறேன். மக்கள் என்னை தினமும் பார்க்கிறார்கள். அவர் ஏதோ விமர்சனம் செய்வதற்காக பேசுகிறார்.
முன்னாள் கவர்னர் கிரண்பேடியை பேய் என்றார். என்னை பொய் என கூறியுள்ளார். கவர்னர் என்றாலே அவர் விமர்சனம் செய்கிறார். இதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. இருப்பினும் நாராயணசாமி அண்ணன் தெரிந்து கொண்டு பேச வேண்டும். இது போன்ற விமர்சனங்கள் வேண்டாம். புதுவையில் மகாகவி பாரதியாருக்கு வானுயர சிலை வைக்க சுற்றுலா திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






