search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு- தை மாதம் நடத்த ஏற்பாடு
    X

    புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு- தை மாதம் நடத்த ஏற்பாடு

    • தமிழகத்தின் ஒரு அங்கம் போன்று புதுவை இருந்தாலும் இங்கும் உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம்.
    • கம்பன் கலையரங்கம், காமராஜர் மணி மண்டபம், பழைய துறைமுக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தலாம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படும் என்று கடந்த பட்ஜெ ட் கூட்டத் தொடரின்போது முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவது தொடர்பாக கலை பண்பாட்டுத்துறை ஆயத்த ஏற்பாடுகளை செய்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதுச்சேரி தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்ட மாநிலம். கம்பன் விழா, இலக்கிய விழா என பல்வேறு தமிழ் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. புதுவை தமிழ் அறிஞர்களும் வெளிநாடுகளில் நடக்கும் பல்வேறு விழாக்களுக்கு சென்று வருகின்றனர்.

    தமிழகத்தின் ஒரு அங்கம் போன்று புதுவை இருந்தாலும் இங்கும் உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம். தமிழகத்தில் ஏற்கனவே உலகத்தமிழ் மாநாடு நடத்தி உள்ளனர்.

    புதுவை மாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்தும் தமிழ்அறிஞர்கள் வருவார்கள். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வந்து செல்வார்கள்.

    இந்த மாநாட்டிற்கு தேவையான நிதியை புதுவை அரசு ஒதுக்கித்தரும். எனவே அது தொடர்பான கவலை வேண்டாம். இந்த மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும்.

    மாநாட்டிற்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதை முதலில் தெரிவிக்கவேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை நாம் செய்து தரலாம்.

    2 அல்லது 3 நாட்கள் இந்த மாநாடு நடத்தப்பட வேண்டும். அதற்கு தேவையான குழுக்கள் போட்டு வருபவர் களை கவனித்துக்கொள்ளலாம். மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கும்.

    அவற்றை எங்கெங்கு நடத்தலாம் என்று திட்டமிட வேண்டும். குறிப்பாக கம்பன் கலையரங்கம், காமராஜர் மணி மண்டபம், பழைய துறைமுக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தலாம்.

    இன்னும் இடங்கள் தேவையென்றால் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

    மாநாட்டின்போது சிலம்பம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளையும் நடத்தலாம். மாநாட்டை வருகிற தை, மாசி மாதங்களில் நடத்தினால் நன்றாக இருக்கும்.

    அதற்கு பின் பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிடும். இல்லாவிட்டால் தேர்தல் முடிந்த பின்னர்தான் நடத்த முடியும். எனவே வெளிநாட்டில் உள்ள தமிழ் அறிஞர்களை தொடர்புகொண்டு பேசி அவர்கள் வர வாய்ப்பு உள்ளதா? எப்போது வருவார்கள் என்பதை கேட்டு தெரிவியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×