search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கை துறைமுகத்தில் நிற்கும் சீனா, பாகிஸ்தான் கப்பல்கள்
    X

    இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கை துறைமுகத்தில் நிற்கும் சீனா, பாகிஸ்தான் கப்பல்கள்

    • சீனாவின் இந்த அடாவடி செயல் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.
    • பாகிஸ்தான் நாட்டு போர்க் கப்பலும் இப்போது இலங்கை கடற்கரை பகுதிக்கு வந்துள்ளது.

    கொழும்பு:

    சீனாவின் உளவுகப்பலான யுவான் வாங்க் 5 என்ற கப்பலை இலங்கை அம்பந்தட்டை துறைமுகத்தில் 6 நாட்கள் நிறுத்தி ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என அந்நாடு இலங்கையிடம் அனுமதி கேட்டது.

    இதற்கு முதலில் ஒப்புதல் அளித்த இலங்கை இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக பின் வாங்கியது. இதனால் உளவு கப்பலை இலங்கைக்கு வருவதை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஆனால் இதை பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் அந்த உளவு கப்பலை சீனா இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

    யுவான் வாங்க் 5 கப்பல் நேற்று இலங்கையின் அம்பந்தட்டை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. தற்போது அந்த கப்பல் அங்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த கப்பல் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கை கோள்களை கண்டறியும் அதி நவீன வசதிகள் கொண்டது.

    சீனாவின் இந்த அடாவடி செயல் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.

    இந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பாகிஸ்தான் நாட்டு போர்க் கப்பலும் இப்போது இலங்கை கடற்கரை பகுதிக்கு வந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீனாவில் கட்டமைக்கப்பட்ட பி.என்.எஸ் தைமூர் என்ற போர்க் கப்பல் மலேசியாவில் இருந்து பாகிஸ்தான் நோக்கி புறப்பட்டது. இந்த கப்பலை வங்காளதேசம் சட்டோ கிராம் என்ற துறைமுகத்தில் நிறுத்த பாகிஸ்தான் அனுமதி கேட்டது.

    ஆனால் இதற்கு வங்காளதேசம் அனுமதி மறுத்து விட்டது. வங்க தேச பிரதமர் ஷேக்ஹ சீனா விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து இலங்கை அப்பந்தட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்குமாறு பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது. இதற்கு இலங்கை சம்மதம் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து பாகிஸ்தான் போர்க்கப்பல் அப்பந்தட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த கப்பலில் அதிநவீன ஆயுதங்கள், சென்சார் கருவிகள், லேசர் உதவியுடன் இயங்கும் ஏவுகணைகளை கொண்ட வசதிகள் உள்ளது.

    பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையினை எடுத்து வருகிறது. சீனாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வரும் பாகிஸ்தான் தற்போது தனது போர்க் கப்பலை இலங்கை கடல் பகுதியில் நிறுத்தி உள்ளதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்துஇருக்கிறது.

    அம்பந்தட்டை துறைமுகம் இலங்கை தலைநகர் கொழும்புக்கு மிக அருகில் உள்ளது.

    சீனாவின் உளவு கப்பல் இங்கிருந்து தமிழ்நாடு உள்பட தென்இந்தியாவில் உள்ள பாதுகாப்பு தளங்களை வேவு பார்க்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. தமிழக கடற்பகுதியில் இருந்து கொழும்பு சிறிது தூரத்தில் தான் உள்ளது. இதனால் இந்த துறைமுகத்தில் இருந்து எளிதாக தமிழகத்தை கண்காணிக்கலாம் .இதன் காரணமாக தமிழக பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்தியாவின் எதிர்ப்பை மீறி, இலங்கை துறைமுகத்தில் நிற்கும் சீனா, பாகிஸ்தான் கப்பல்களால் இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கப்பல்களின் செயல்பாடுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    Next Story
    ×