என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்
    X

    மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்

    • சுரங்க மின் நிலையங்கள் வழியாக காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அணை இந்தாண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந் தேதி நிரம்பியது.

    இதையடுத்து அணைக்கு வரும் உபரிநீர் மேட்டூர் அணையில் இருந்து 16 கண்மதகு வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே கடந்த 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 25 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை முதல் வினாடிக்கு 15 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்து காணப்பட்டது.

    இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது. ஆனாலும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    Next Story
    ×