என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சாலை வசதி கேட்டு தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதம்
    X

    சாலை வசதி கேட்டு தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதம்

    • 18 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற தேர்தலையும் புறக்கணிப்போம் என தெரிவித்திருந்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை, மயிலாடும்பாறை ஒன்றியத்துக்குட்பட்ட வருசநாடு-வாலிப்பாறை இடையே சாலை அமைக்கும் பணி கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

    குறிப்பிட்ட அளவு சாலை அமைக்க வனத்துறையினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் நேரடியாக இடத்தை பார்வையிட்டு சாலை அமைக்கும் பணிக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என வனத்துறையினருக்கு அறிவுறுத்தியும், சுமூகத்தீர்வு ஏற்படவில்லை. குறிப்பிட்ட இடத்துக்கு பதிலாக பொதுமக்கள் 2 மடங்கு இடத்தை தருவதாக தெரிவித்தனர். வன விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க வேலி அமைத்து தரப்படும் என்றும், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும் எனவும் வனத்துறையினரிடம் உறுதிமொழி அளித்தும், சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கவில்லை.

    இதனால் 18 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல கட்ட போராட்டங்கள், வீடுகளில் கருப்பு கொடி, கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு போன்ற பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

    மேலும் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற தேர்தலையும் புறக்கணிப்போம் என தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் இன்று வருசநாடு, தும்மக்குண்டு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் வருகை தந்தார். அப்போது மயிலாடும்பாறையில் கிராம மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர். சாலை அமைக்கும் பணியை ஏன் தாமதம் செய்கிறீர்கள் என கேட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மகாராஜன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுமக்களிடம் சமாதானம் பேசினர். இன்னும் 15 நாட்களில் ஒரு கமிட்டி அமைத்து கூட்டம் நடத்தப்படும் என்றும் அதில் சாலை அமைக்கும் பணிக்கு உரிய தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் 15 நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் ஆடு, மாடுகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மகாராஜன் எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இச்சம்பவத்தால் மயிலாடும்பாறை கிராமத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×