என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்தில் குழந்தைகளிடையே பரவும் பொன்னுக்கு வீங்கி வைரஸ்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழகத்தில் குழந்தைகளிடையே பரவும் பொன்னுக்கு வீங்கி வைரஸ்

    • ஒரு வாரத்தில் இருந்து 14 நாட்களுக்குள் அந்த பாதிப்பு உடலுக்குள் ஊடுருவி அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
    • தமிழகத்தில் நிகழாண்டில் 750-க்கும் அதிகமானோருக்கு பொன்னுக்கு வீங்கி கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் பருவ கால மாற்றத்தின் காரணமாக குழந்தைகளிடையே பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

    மாதந்தோறும் 80-க்கும் மேற்பட்டோர் அந்த தொற்றுக்குள்ளாவதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய் காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. உமிழ்நீா் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி மற்றும் காய்ச்சல் ஏற்படக்கூடும். அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளும் காணப்படலாம்.

    பொன்னுக்கு வீங்கி பாதித்தவர்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீா் திவலைகள் மூலம் பிறருக்கு அது பரவும்.

    ஒரு வாரத்தில் இருந்து 14 நாட்களுக்குள் அந்த பாதிப்பு உடலுக்குள் ஊடுருவி அறிகுறிகளை வெளிப்படுத்தும். இதற்கென தனியாக தடுப்பு மருந்துகள் தேவையில்லை என்பதால், நோய் தொற்றுக்குள்ளானவா்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தாலே அந்த பாதிப்பு சரியாகிவிடும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

    இந்நிலையில், தமிழகத்தில் நிகழாண்டில் 750-க்கும் அதிகமானோருக்கு பொன்னுக்கு வீங்கி கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதுதொடா்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    ஒவ்வொரு பருவ காலங்களிலும், சில வகை தொற்றுகள் பரவுகின்றன. அந்த வகையில் தற்போது பொன்னுக்கு வீங்கி பரவி வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நிகழாண்டில் அந்த பாதிப்பு சற்று கூடுதலாக பதிவாகி உள்ளது. இருந்தாலும், அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் தொற்றுக்குள்ளான ஓரிரு வாரத்தில் தானாகவே அது சரியாகிவிடும். நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்டவா், தம்மை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது.

    தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் எம்.ஆா். எனப்படும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படுகிறது. அதே வேளையில், எம்.எம்.ஆா். எனப்படும் தட்டம்மை மம்ப்ஸ் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை. தடுப்பு மருந்துகளைக் காட்டிலும், நோய் எதிர்ப்பாற்றலே இத்தகைய பாதிப்பை சரி செய்துவிடும் என்பதால் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டியதில்லை என்றார்.

    Next Story
    ×