என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நெமிலி பண்ணையில் குழந்தைகளை மிகவும் கவர்ந்த சூப்பர் ஸ்டார் ஆலி முதலை திடீர் மரணம்
- மாமல்லபுரம் அருகே உள்ள வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் முதலைப் பண்ணை உள்ளது.
- குஜராத்தில் உள்ள தனியார் உயிரியல் பூங்காவுக்கு 1000 முதலைகளை இடமாற்றம் செய்ய மத்திய உயிரியல் பூங்கா அனுமதி அளித்தது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே உள்ள வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் முதலைப் பண்ணை உள்ளது. இங்கு சுமார் 1200-க்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டு வந்தன.
கொரோனா கால கட்டத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக இங்குள்ள முதலைகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நிர்வாகத்தினர் பண்ணையில் உள்ள முதலைகளை வேறு இடத்துக்கு மாற்ற திட்டமிட்டனர்.
இதைத் தொடர்ந்து குஜராத்தில் உள்ள தனியார் உயிரியல் பூங்காவுக்கு 1000 முதலைகளை இடமாற்றம் செய்ய மத்திய உயிரியல் பூங்கா அனுமதி அளித்தது. இதையடுத்து இதுவரை சுமார் 400 முதலைகள் குஜராத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
மீதமுள்ள முதலைகள் தொடர்ந்து நெம்மேலியில் உள்ள பண்ணையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தினமும் ஏராளமான பார்வையாளர்கள் வந்து முதலைகளை பார்த்து செல்கின்றனர். இரவிலும் முதலைளை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பண்ணையில் குழந்தைகளை மிகவும் கவர்ந்த ராக்ஸ்டார் மற்றும் சூப்பர் ஸ்டாராக இருந்த 'ஆலி' என்று செல்லமாக அழைக்கப்பட்ட முதலை திடீரென இறந்தது. இது அதனை பராமரித்தவர்கள் மற்றும் பண்ணைக்கு வரும் பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இறந்து போன முதலை கடந்த 2003-ம் ஆண்டு பிறந்து உள்ளது. இதற்கு 'ஆலி' என்று செல்லமாக பெயரிட்டு பராமரிப்பாளர்கள் அழைத்து வந்தனர்.
இந்த முதலை சுமார் 30 கட்டளைகளை பின்பற்றி அதன்படி நடந்து உள்ளது. தண்ணீரில் அது இருக்கும் போது வெளியே வர அழைத்தால் உடனடியாக வந்து விடும். செல்ல நாய்க்குட்டி போல் ஆலி முதலை இருந்ததாக அதனை பராமரித்தவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
ஆலி முதலை பெண் இனம் ஆகும். கடந்த 2003-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து வந்த முதலைகளுக்கு பிறந்தது. குழந்தை பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அதன் பெயரை சொல்லி, வெளியே வா, உட்காரு, திரும்பி வா என்பது உள்ளிட்ட 30 கட்டளைகளுக்கு ஏற்ப நடந்தது. அமெரிக்க முதலை 50 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.
முதலைகளும் மனிதர்களை போன்றதுதான். ஒவ்வொன்றுக்கும் ஒரு திறமை உண்டு. இங்குள்ள 6 முதலைகள் கட்டளைக்கு ஏற்ப நடந்தாலும் 'ஆலி'யின் திறமை போல் வராது. அதைப் போல வேறு இருக்க முடியாது. ஆலியின் இறப்பு எங்களுக்கு மிகவும் கடினமானது. பண்ணையில் உள்ள அனைத்து முதலைகளுக்கு இதே போல் கட்டளைக்கு கீழ்படிய பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலி முதலைக்கு கடந்த 2008 முதல் 2010-ம்ஆண்டு வரை பயிற்சி அளித்த சோகம் முகர்ஜி என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டு உள்ளார். அதில், "ஆலியின் மரணத்தை அறிந்து மனம் உடைந்தேன். அதனை மிகவும் இழக்கிறேன். முதலைகளின் நடத்தை பற்றி அறிய முக்கிய பங்கு ஆற்றியது. அதனுடன் உணர்வுப் பூர்வமான தொடர்பு இருந்தது. அதனுடன் நேரத்தை செலவழித்ததால் நான் மன அழுத்தத்தை சமாளித்தேன்" என்று குறிப்பிட்டு உள்ளார்.






