என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    செங்குன்றம் அருகே தனியார் தொழிற்சாலையில் ரசாயன புகையுடன் வாயு கசிவு ஏற்பட்டதால் மக்கள் பீதி
    X

    செங்குன்றம் அருகே தனியார் தொழிற்சாலையில் ரசாயன புகையுடன் வாயு கசிவு ஏற்பட்டதால் மக்கள் பீதி

    • வாயு கசிவு ஏற்பட்டதால் கண் எரிச்சல் ஏற்பட்டதுடன் மூச்சு திணறலும் உண்டானது. சாலையில் நடந்து சென்றவர்களும் இதேபோல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
    • தீயணைப்பு வீரர்கள் புகை மற்றும் வாயு கசிவை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    செங்குன்றம்:

    செங்குன்றம் அருகே உள்ள பாயசம்பாக்கம், கிராண்ட்லைன் கன்னியம்மன்கோவில் தெருவில் கொரட்டூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பிளீச்சிங் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் தொழிற்சாலையில் திடீரென வெள்ளை புகையுடன் வாயு கசிவு ஏற்பட்டது. பாதையே தெரியாத அளவுக்கு வெண்புகை அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் பீதி அடைந்தனர்.

    வாயு கசிவு ஏற்பட்டதால் கண் எரிச்சல் ஏற்பட்டதுடன் மூச்சு திணறலும் உண்டானது. சாலையில் நடந்து சென்றவர்களும் இதேபோல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர், மணலி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்தன. விளாங்காடுபாக்கம் கல்மேடு ஆஸ்பத்திரி அருகிலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

    தீயணைப்பு வீரர்கள் புகை மற்றும் வாயு கசிவை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் ரசாயன புகை என்பதால் அதனை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. மதியம் 12 மணி வரை தொழிற்சாலையில் இருந்து வெள்ளைநிற புகையுடன் ரசாயன வாயு தொடர்ந்து வெளியேறிய படி இருந்தது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. ரசாயன வாயு வெளியேறிய இந்த பிளீச்சிங் பவுடர் தயாரிக்கும் கம்பெனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலையில் இருந்த ரசாயன பொருட்களை மண்ணில் புதைக்கும் படி கூறியதாக தெரிகிறது.

    ஆனால் அந்த ரசாயன பொருட்கள் தொழிற்சாலையில் திறந்த வெளியில் சிதறி கிடந்து உள்ளன. இன்று அதிகாலை பலத்த மழை பெய்தபோது தண்ணீர் அந்த ரசாயன பொருட்கள் மீது பட்டதால் இந்த வெண்புகையுடன் வாயு கசிந்து இருப்பது தெரியவந்து உள்ளது. மேலும் தொழிற்சாலையில் ரசாயன கசிவால் வெப்பம் தாங்காமல் சில பொருட்கள் வெடித்தன.

    இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து புகை வெளியேறுவதை கட்டுப்படுத்தினர். மீதம் உள்ள ராசாயன பொருட்களை மண்ணில் புதைத்து வருகின்றனர்.

    ரசாயன புகை வெளியேறியதால் தொழிற்சாலை அருகில் உள்ள பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களை ஆம்புலன்சு மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    நேற்று மே தினத்தையொட்டி தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இன்று காலை தொழிலாளர்கள் வருவதற்கு முன்பே ரசாயன வாயு வெளியேறிதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    இதுகுறித்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×