search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
    X

    திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

    • நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிகளவில் ஆர்வம் காட்டினர்.
    • ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுசந்தையில் ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வியாபாரிகள் ஆடு, கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். ஒவ்வொரு முறையும் அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் ஆட்டுச் சந்தையில் வியாபாரிகளும், ஆடு, கோழிகளை வாங்குவோர்கள் அதிகளவில் திரளுவார்கள். இதனால் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் காணப்படும்.

    இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். இன்று ஒரே நாளில் 10 ஆயிரம் ஆடுகள் வரை விற்கப்பட்டது.

    நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக ஆட்டின் விலை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. ஒரு ஆட்டின் விலை ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இன்று மட்டும் திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ரூ.7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடந்தது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ''ரம்ஜான் பண்டிகை காரணமாக இன்று நடந்த சந்தையில் ஆடுகள், கோழிகள் அதிகளவில் விற்பனை ஆகியுள்ளது. பண்டிகை காரணமாக விலை அதிகமாகியுள்ளது. கடந்த 2 வார காலமாக இதே நிலை நீடிக்கிறது. ரம்ஜான் முடிந்த பின் விலை குறைய வாய்ப்புள்ளது.

    தற்போது ஆடுகளுக்கு அதிக தேவை இருந்தாலும் திருமங்கலம் சந்தையில் ஆடுகள் வரத்து குறைவாக உள்ளது. ஒவ்வொரு முறையும் தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட விசேஷ நாட்களில் திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் அதிகளவில் வியாபாரிகளும், பொதுமக்களும் கூடுகிறார்கள். தற்போதுள்ள ஆட்டுச்சந்தையில் இட நெருக்கடி அதிகமாக இருப்பதால் அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளோம்'' என்றார்.

    Next Story
    ×