search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெண்களை ரகசியமாக ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய மதுரை சகோதரர்கள்
    X

    பெண்களை ரகசியமாக ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய மதுரை சகோதரர்கள்

    • தம்பி முத்துராஜா சில பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறி அவர்களை வீடியோ காலில் நிர்வாணமாக பேசவைத்து அதனை பதிவு செய்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
    • செல்போன்கள் மற்றும் லேப் டாப்பை ஆய்வு செய்த போது, கடந்த சில மாதம் மட்டும் நூற்றுக்கணக்கான பெண்கள், மாணவிகளை ரகசியமாக வீடியோ எடுத்து அதனை லேப்டாப்பில் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் பெருங்குடியை சேர்ந்த அண்ணன், தம்பியான முத்துராஜா (30), அங்கு குமார் (32) ஆகிய இருவரும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை பார்த்து வருகின்றனர். இதற்கிடையே இருவருக்கும் திருமணமாகிய நிலையில் அங்கு குமார் மதுரை விமான நிலையத்தில் தனியார் விமான நிறுவனத்தின் லக்கேஜ் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.

    தம்பி முத்துராஜா பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனம் ஒன்றில் டெலிவரி பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். பெற்றோர் பொருளாதார ரீதியாக வசதியானவர்கள் என்பதால் வேலைக்கு செல்வதையே பொழுது போக்கிற்காக அண்ணன், தம்பி இருவரும் சென்று வந்துள்ளனர்.

    இருவரும் எப்போதும் இரவிலும் கூட தூங்காமல் செல்போன் மற்றும் லேப் டாப்பை பார்த்துக் கொண்டே இருந்து வருவது அவர்களின் தினசரி பழக்கமாக இருந்துள்ளது. அண்ணன், தம்பி இருவருக்கும் தனக்கு தெரிந்த நபர்களுடைய விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தூரத்து உறவினர் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு சென்ற தம்பி முத்துராஜா அங்கு இளம்பெண் ஒருவர் வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது அதனை தனது செல்போனில் ரகசியமாக படம் பிடித்துள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக இளம்பெண் கதவைத் திறந்தபோது செல்போனில் வீடியோ பதிவு செய்ததை பார்த்து முத்து ராஜாவை திட்டியுள்ளார். மேலும் அந்த வீடியோவை அழிக்குமாறும் கூறியுள்ளார். அப்போது இதனை யாரிடமும் சொல்லக்கூடாது என முத்துக்குமார் அந்த இளம்பெண்ணிடம் கூறியுள்ளார்.

    இதனையடுத்து சில நாட்கள் கழித்து அந்த இளம்பெண் தனது உறவினர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் இளம்பெண்ணை நேரில் சந்தித்து மிரட்டி நீ மற்றும் உனது சகோதரி குளிப்பது போன்ற வீடியோக்களை நானும், எனது அண்ணனும் வீடியோ எடுத்து வைத்திருப்பதாக கூறி மிரட்டி உள்ளனர்.

    மேலும் அந்த வீடியோவை அழிக்க வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து சரக உதவி ஆணையர் காமாட்சி உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான தனிப்படையினர் விசாரணையை தொடங்கினர்.

    இதில் செல்போனில் ஆபாசமாக வீடியோ படம் எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் அண்ணன், தம்பி இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள் வெளியானது.

    விசாரணையில் சகோதரர்கள் இருவரும், தாங்கள் ஒவ்வொரு விசேஷங்களுக்கு செல்லும் பொழுதும் அங்கு உடை மாற்றும் இடங்களில் செல்போனை சார்ஜ்போடுவது போலவும் மற்றும் கழிவறைகளில் செல்போன்களை மறந்து வைத்து விட்டு வருவதுபோலவும், ஆடை மாற்றுவது மற்றும் குளிப்பது போன்றவற்றை ரகசியமாக வீடியோவாக பதிவு செய்து அதனை செல்போன் மற்றும் லேப் டாப்பில் பதிவேற்றம் செய்து வைத்துள்ளனர்.

    இருவரும் தனியாக இருக்கும்போது இந்த வீடியோக்களை பார்த்து ரசிக்கும் மனநிலையில் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் பணிபுரியும் இடங்கள் மற்றும் பொது வெளியில் செல்லும் பொழுது சந்தைகள், கடைகள் ஆகிய பகுதிகளில் பெண்களுடைய அந்தரங்க உறுப்புகளை அவர்களுக்கு தெரியாமலேயே செல்போனை மறைவாக பயன்படுத்தி படமாக எடுத்து வைத்திருக்கும் பழக்கம் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    முதலில் அண்ணன் இதுபோன்று செல்போனில் பெண்களை மறைமுகமாக ஆபாசமாக படம் எடுப்பதை பார்த்த தம்பியும், அதே போன்று செய்ய வேண்டும் என்பதற்காக அண்ணனை பாலோ செய்து பெண்களை ஆபாசமாக மறைவிடங்களில் வைத்து வீடியோ எடுத்து வந்துள்ளான்.

    தம்பி முத்துராஜா சில பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறி அவர்களை வீடியோ காலில் நிர்வாணமாக பேசவைத்து அதனை பதிவு செய்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதே போன்று முத்துராஜா தான் பழகக்கூடிய அனைத்து பெண்களிடமும் காதலிப்பதாக கூறி இதுபோன்று ஆபாச வீடியோக்களை எடுத்து அது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    இவர்களுடைய செல்போன்கள் மற்றும் லேப் டாப்பை ஆய்வு செய்த போது, கடந்த சில மாதம் மட்டும் நூற்றுக்கணக்கான பெண்கள், மாணவிகளை ரகசியமாக வீடியோ எடுத்து அதனை லேப்டாப்பில் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. நாகர்கோவிலில் பாலியல் வழக்கில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய காசியின் செயலை மிஞ்சும் வகையில் மதுரையில் அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து பெண்களை ரகசியமாக ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து ரகசியமாக பார்த்து ரசித்து வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர்ச்சியாக இருவரிடமும் இருந்த வீடியோக்களை கைப்பற்றிய போலீசார் இது குறித்து வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். தேவையான வசதிகளை பெற்றோர் ஏற்படுத்திக் கொடுத்ததால் இதுபோன்ற இச்சை செயல்களுக்கு அடிமையான அண்ணன், தம்பி இருவரும் சில ஆண்டுகளாக இதே மனநிலையில் இருந்து வந்துள்ளனர்.

    தற்போது தொழில்நுட்பம் மேம்பட்டு விட்டதால் அதனை தவறாக பயன்படுத்தும் இது போன்ற நபர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க பெண்கள், மாணவிகள் யாராக இருந்தாலும் தாங்கள் உடை மாற்றும் அறைகள், குளியலறை, படுக்கை அறைகளில் செல்போன்கள், கேமிராக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதையும், வெளி இடங்களுக்கு செல்லும் போது ரகசிய கேமிராக்கள் உள்ளதா என ஒருமுறை மொபைல் ஆப்களின் மூலமாக சோதனை செய்து விட்டு பயன்படுத்துவது சிறந்தது எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது செல்போன் கேமராக்களை தொடாமலே வீடியோக்களை பதிவு செய்யும் ரகசிய தொழில்நுட்பங்கள் அதிகரித்துள்ளதால், தனியார் அறைகளில் செல்போனை பயன்படுத்துவதில் கூடுதல் கவனம் தேவை என்றும் எச்சரித்துள்ளனர்.

    Next Story
    ×