search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒன்றோடொன்று பேசிக்கொள்ளும் மனித உடல் உறுப்புகள்-  ஆய்வில் தகவல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஒன்றோடொன்று பேசிக்கொள்ளும் மனித உடல் உறுப்புகள்- ஆய்வில் தகவல்

    • மனித உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் நலம் விசாரித்துக்கொள்ளும் என்பதாகும்.
    • மனித உடல் முழுமையும் நலமாகவும், வளமாகவும் இருப்பதாக இந்த மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரிது, அரிது... மானிடராய் பிறத்தல் அரிது என்பது அவ்வையின் பொன் மொழி. அந்த வகையில் மனித பிறப்பில் எத்தனையோ அதிசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதில் ஒன்றுதான் மனித உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் நலம் விசாரித்துக்கொள்ளும் என்பதாகும்.

    இதனை நாம் அறிவியல் பூர்வமாக அறிந்துகொள்ள முடியாவிட்டாலும் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் படைத்துள்ள படைப்புகள் வாயிலாக இந்த அரிய செயல்களை உணர்ந்து வருகிறோம்.

    அந்த வகையில் சென்னை ஐ.ஐ.டி.யின் உயிரியல் துறை பிரிவின் ஆராய்ச்சியாளர் மணிகண்ட நாராயணன், மல்ட்டிசென்ஸ் என்ற தலைப்பில் ஒரு மருத்துவ ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அதில் மனித உடலுறுப்புகள் ஒன்றோடொன்று சமிக்ஞைகள் வாயிலாக பேசிக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக வயிற்றில் பசி ஏற்படும்போது, இந்த பசியை ஒரு வகையான ஜீன் மூலம் மூளைக்கு தூண்டப்பட்டு உணவு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மூளையின் இந்த தூண்டுதலால் வயிறு நிரம்புகிறது. இதனால் மூளை மற்றும் வயிறு ஒன்றோடொன்று ஜீன் மூலம் பேசிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலை பொறுத்தவரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜீன்கள் உள்ளன.

    இந்த ஜீன்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வேலை செய்வதில்லை. அது ஒவ்வொரு உறுப்பின் தேவைகளை அறிந்து தங்களது பணிகளை செய்கின்றன. இதன்மூலம் அனைத்து உடல் உறுப்புகளும் வேண்டிய சக்தியை பெற்று மனித இயக்கத்திற்கு உதவி செய்கிறது. ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் தேவையான சமிக்ஞைகளை அனுப்பும் பொறுப்பு புரோட்டின்களுக்கு உண்டு.

    இந்த புரோட்டின்கள் மூலம் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்கள் தகவல் பரிமாற்றங்களை செய்து கொள்கின்றன. மேலும், மனித செயல்பாடுகளில் முக்கியத்துவம் பெற்ற ஜீன்கள் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் பாலமாக செயல்பட்டு முக்கிய தகவல் பரிமாற்றங்களை செய்கிறது. இந்த பணி மனித உடல் முழுமைக்கும் ஜீன்கள் திசுக்கள் மூலம் மேற்கொள்வதால் மனித உடல் ஆரோக்கியமாக அமைய வழிவகுக்கிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர, தகவல் பரிமாற்றத்திற்கு மனித உடலில் உள்ள மூலக்கூறு கட்டமைப்புகளும் உதவி செய்வதாக தெரியவந்துள்ளது. மனித உடலின் உள்ளுறுப்புகளில் இந்த தகவல் தொடர்பு நெட்வொர்க் சிறப்பாக செயலாற்றுகிறது. மேலும், தட்பவெப்பம், மனித உடலுக்கு தேவையான ஆற்றல் உருவாக்கம் உள்ளிட்ட பணிகளையும் இந்த மூலக்கூறு கட்டமைப்புகள் ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் தக்கவாறு செய்துவருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இதன்மூலமே மனித உடல் முழுமையும் நலமாகவும், வளமாகவும் இருப்பதாக இந்த மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆராய்ச்சியாளர்கள் டாக்டர்கள் தருண்குமார், சங்கமித்ரா, பேராசிரியர் பாலராமன் ரவீந்திரன், ராமநாதன், சேதுராமன் ஆகியோரும் மனித உடலில் மூலக்கூறுகளின் கட்டமைப்புகள் ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் தகவல் தொடர்பாளர்களாக செயல்படுவதாக கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் மனித உடல் உறுப்புகளின் வளர்ச்சியும் அமைவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மனித உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் நன்றாக இருந்தால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும். இதற்காகவே ஒவ்வொரு உடல் உறுப்புகளும் தங்களுக்குள்ளே சமிக்ஞைகள் வாயிலாக பேசி நோயற்ற வாழ்வுக்கு வழிகாட்டியாக செயல்படுகிறது.

    இதை உணர்ந்து மனிதர்களாகிய நாமும் உடலை சுத்தமாக, ஆரோக்கியமாக பேணுவோம், நலம்பெறுவோம் என்பதுதான் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

    Next Story
    ×