search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரையில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்டிய 130 பேர் கைது
    X

    மதுரையில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்டிய 130 பேர் கைது

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கவர்னரை கண்டித்து முதலில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர்.
    • மத்திய மோடி அரசு தமிழ்நாடு கவர்னரை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

    மதுரை:

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று 55-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குவதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை கலெக்டர் சங்கீதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி அங்கிருந்து காரில் புறப்பட்டு பல்கலைக்கழகம் நோக்கி சென்றார். முன்னதாக இந்த பட்டமளிப்பு விழாவில் முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், நூற்றாண்டை கடந்தவருமான சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவேண்டும் என்று கடந்த ஆகஸ்டு 18 மற்றும் செப்டம்பர் 20-ந்தேதிகளில் நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டது.

    அதனை கவர்னர் நிராகரித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கவர்னருக்கு எதிராக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் இன்று மதுரை வரும் அவருக்கு கருப்புக் கொடி காட்ட இருப்பதாகவும் அறிவித்து இருந்தனர்.

    முன்னதாக சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர் மறுத்ததால் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி அறிவித்துள்ளார். இதனால் மதுரையில் இன்று பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து கவர்னர் பயணம் செய்யும் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    விமான நிலையத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் வழியில் நாகமலை புதுக்கோட்டையை அடுத்த நான்கு வழிச்சாலையான கீழக்குயில்குடி பகுதியில் திரண்டு நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கவர்னரை கண்டித்து முதலில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். பின்னர் தாங்கள் எடுத்து வந்திருந்த கருப்புக்கொடிகளை உயர்த்திப்பிடித்து எதிர்ப்பை தெரிவித்தனர். அதனை கவர்னரின் வாகனத்திற்கு முன்னால் சென்ற போலீசார் தடுத்தனர். இதில் போலீசாருக்கும், கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே மோதல் மற்றும் தள்ளுமுள்ளு உருவானது.

    அப்போது இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த நிர்வாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கவேண்டும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் கையெழுத்திட வேண்டும், மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுவதை கைவிட வேண்டும், மத்திய மோடி அரசு தமிழ்நாடு கவர்னரை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 130 பேரை கைது செய்த போலீசார் அவர்களை 3 பேருந்துகளில் ஏற்றி அழைத்து சென்று அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அதன்பின்னர் கவர்னர் அந்த பகுதியை கடந்து பல்கலைக்கழகத்திற்கு சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.

    Next Story
    ×