search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரிக்கை: 3-ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது
    X

    பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம். 

    விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரிக்கை: 3-ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது

    • கடந்த 50 ஆண்டுகளாக, பள்ளிபாளையத்தின் பொருளாதார வளர்ச்சியில் விசைத்தறி தொழில் பெரும் பங்காற்றி வருகிறது.
    • ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் விசைத்தறி தொழிற்சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகரில் நெசவுத்தொழில் பிரதானமாக உள்ளது. கைத்தறியில் இருந்து மெல்ல விசைத்தறிக்கு மாறிய பின்னர் தான், நெசவுத்தொழில் நல்ல வளர்ச்சியை பெற்றது. வீடுகளில் இயங்கிய விசைத்தறிகள், விசைத்தறி பட்டறைகளாக மாற்றம் பெற்றன.

    கடந்த 50 ஆண்டுகளாக, பள்ளிபாளையத்தின் பொருளாதார வளர்ச்சியில் விசைத்தறி தொழில் பெரும் பங்காற்றி வருகிறது. வேட்டி, சட்டை, சுடிதார், லுங்கி உள்பட பல வகையான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு செல்கிறது. இந்த தொழிலை, நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பி ஒரு லட்சம் பேர் உள்ளனர்.

    விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்தி, சதவீத அடிப்படையில் கூலி உயர்வு வழங்கப்படுகிறது.

    கடைசியாக போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிந்துவிட்டதால், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட வேண்டும். இதை தொடர்ந்து ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் விசைத்தறி தொழிற்சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டது.

    இதையெடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி, பள்ளிபாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொழிற் சங்கத்தினர் இடையே முதல் கட்ட பேச்சு வார்த்தை நடந்தது. அதில், உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 3 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதாக தெரிவித்தனர். இதை தொழிற்சங்கத்தினர் ஏற்கவில்லை.

    இதை தொடர்ந்து 2-ம் கட்ட பேச்சு கடந்த 18-ந் தேதி நடந்தது. அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு முன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது.

    இந்த பேச்சு வார்த்தையில் பள்ளிபாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் நிர்வாகிகளும், தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டனர். இதில் உரிமையாளர்கள் சங்கத்தினர் 5 சதவீதம் அளிப்பதாக தெரிவித்தனர். தொழிற்சங்கத்தினர் 25 சதவீதம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து 4-வது கட்ட பேச்சுவார்த்தை வருகிற 3-ந் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×