search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாமிதோப்பில் இன்று அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா கொடியேற்றம்
    X

    சாமிதோப்பில் இன்று அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா கொடியேற்றம்

    • காலை 6.30 மணிக்கு குருசுவாமி தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
    • 29-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தென்தாமரைகுளம்:

    சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப் பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான தை திருவிழா இன்று (வெள்ளிக் கிழமை) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    காலை 6.30 மணிக்கு குரு.சுவாமி தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்ன தர்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நடக்கிறது.

    2-ம் நாளான நாளை (20-ந்தேதி) இரவு அய்யா பரங்கி நாற்காலியில் பவனி வருதல், 3-ம் நாள் அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம்வருதல், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதல், 5-ம் நாள் பச்சை சாத்தி அன்ன வாகனத்தில் பவனி வருதல், 6-ம் நாள் கற்பக வாகன பவனி, 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது.

    வருகிற 26-ந்தேதி 8-ம் திருவிழாவில் அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடு தல் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வும் நடக்க உள்ளது. தொடர்ந்து அன்ன தர்மம் நடக்கிறது.

    9-ம் நாள் இரவு அனுமன் வாகன பவனி, 10-ம் திருவிழாவான (ஞாயிற்றுக் கிழமை) இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனி, 11-ம் திருவிழாவான 29-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணி விடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் அய்யா வைகுண்டர் கலையரங்கத்தில் தினமும் அய்யாவழி சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    விழா ஏற்பாடுகளை குருமார்கள் சுவாமி, தங்க பாண்டியன், ராஜசேகரன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×