என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த தி.மு.க.வினர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டுபிடித்து தருமாறு புகார்- ஆண்டிபட்டி தி.மு.க.வினர் மனு
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தி.மு.க. நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளனர்.
- பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியபடி 95 சதவீத பணி நிறைவடைந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை நாங்கள் பார்க்கச் சென்றோம்.
ஆண்டிபட்டி:
தமிழகம் வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மதுரையில் 750 படுக்கைகள், 250 ஐ.சி.யு படுக்கைகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
இதற்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் மற்றும் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். சுற்றுச்சுவர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பதில் அளித்து வருகின்றனர்.
இதனிடையே தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தி.மு.க. நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியபடி 95 சதவீத பணி நிறைவடைந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை நாங்கள் பார்க்கச் சென்றோம். அப்போது அங்கு கட்டப்பட்டு இருந்த கட்டிடங்களை காணவில்லை. எனவே மாயமான கட்டிடங்களை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.






