என் மலர்
விளையாட்டு

வீரர்கள் நெருக்கடியை சிறப்பாக கையாண்டனர்- இந்திய அணியின் பயிற்சியாளர் புகழாரம்
- ஒரு கட்டத்தில் 0-2 என்ற கணக்கில் இந்தியா பின்தங்கி இருந்தது.
- கடைசி 15 நிமிடங்களில் 4 கோல்கள் அடித்து இந்தியா முத்திரை பதித்தது.
2 முறை சாம்பியனான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி முதல் முறையாக வெண்கலம் பதக்கம் பெற்றது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.
இந்தியாவின் இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. ஏனென்றால் ஒரு கட்டத்தில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது. கடைசி 15 நிமிடங்களில் 4 கோல்கள் அடித்து முத்திரை பதித்தனர்.
49-வது நிமிடத்தில் அங்கீத் பால் (பெனால்டி கார்னர்), 52-வது நிமிடத்தில் மன்மீத்சிங் (பெனால்டி கார்னர்), 57-வது நிமிடத்தில் ஷர்தானந்த் திவாரி (பெனால்டி ஸ்டிரோக்), 58-வது நிமிடத்தில் அன்மோல் எக்கா (பெனால்டி கார்னர்) ஆகியோர் இந்திய அணிக்கான கோலை அடித்தனர்.
இந்திய அணி அர்ஜென்டினாவை வீ்த்தி வெண்கல பதக்கம் வென்றது குறித்து தலைமை பயிற்சியாளர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் கூறியதாவது:-
இந்திய வீரர்கள் நெருக்கடியை சிறப்பாக கையாண்டனர். கடைசி 15 நிமிடத்தில் ஒரு அணியாக ஆடினார்கள். அழுத்தத்தில் இருந்து விடுப்பட்டு ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு கூறினேன். அவர்கள் அதை சிறப்பாக செய்தனர். ஆனால் கடுமையான சவாலை எதிர் கொண்டு அவர்கள் இந்த வெற்றியை பெற்றனர். எல்லாவற்றையும் திட்டமிட்டோம். வீரர்களின் அபாரமான செயல்பாட்டை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






