search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஆன்மிக அமுதம்- முருகன் என்றால் அழகு!
    X

    ஆன்மிக அமுதம்- முருகன் என்றால் அழகு!

    • முருகனது கருணை எதிரியையும் கொல்லாமல் தன் அடியவர்களாக மாற்றும் வலிமையுடையது.
    • திருமாலுக்குக் காடு சார்ந்த உலகமும் முருகனுக்கு மலை சார்ந்த உலகமும் இந்திரனுக்குக் கடல் சார்ந்த உலகமும் வருணனுக்கு மணல் சார்ந்த உலகமும் உண்டு என்கிறது தொல்காப்பியம்.

    சேயோன் என அழைக்கப்படும் முருகனுக்குக் கந்தன், ஆறுமுகன், குமரன், காங்கேயன், கார்த்திகேயன் என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு.

    மற்ற தெய்வங்கள் அசுரர்களை வதம் செய்ததை அந்தந்தப் புராணங்களில் வாசிக்கிறோம். கந்த புராணம் வித்தியாசமானது. முருகன் சூரபத்மனை வதம் செய்வதில்லை. மரமாய் நின்ற சூரபத்மன் மேல் அம்பு எய்து அவனைச் சேவலாகவும் மயிலாகவும் மாற்றுகிறான்.

    சேவலைத் தன் கொடியாக்கிக் கொள்கிறான். மயிலை வாகனமாக்கிக் கொள்கிறான். முருகனது கருணை எதிரியையும் கொல்லாமல் தன் அடியவர்களாக மாற்றும் வலிமையுடையது.

    * முருகனின் ஆயுதம் வேல். மற்ற கடவுளரின் திருக்கரங்களில் உள்ள சூலம், சங்கு, சக்கரம் போன்றவை கடவுளரின் நாமங்களோடு அல்லாமல் தனித்த முறையில் பெயர்களாக அமைவதில்லை. ஆனால் முருகன் கையிலுள்ள வேல், அப்படியே தமிழர்கள் பலருக்குப் பெயராக அமைவது இந்த வேலின் தனிச் சிறப்பு.

    வேலாயுதம், சக்திவேல், கந்தவேல், வடிவேல், ஞானவேல், தங்கவேல் என்றெல்லாம் குழந்தைகளுக்குப் பெயர்சூட்டி மகிழ்கிறார்கள் தமிழர்கள். விரோதியையும் கொல்லாது விடுத்த வேலாயுதத்தின் மேல் தமிழர்கள் மிகுந்த பக்தி செலுத்துகிறார்கள்.

    * முருகன் பழந்தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் கடவுள். மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம், இன்னின்ன நிலங்களுக்கு இன்னின்ன கடவுளர் உண்டு என வகைப்படுத்திப் பேசுகிறது.

    'மாயோன் மேய காடுறை உலகமும்

    சேயோன் மேய மைவரை உலகமும்

    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

    வருணன் மேய பெருமணல் உலகமும்

    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே!'

    என்பது தொல்காப்பிய நூற்பா.

    திருமாலுக்குக் காடு சார்ந்த உலகமும் முருகனுக்கு மலை சார்ந்த உலகமும் இந்திரனுக்குக் கடல் சார்ந்த உலகமும் வருணனுக்கு மணல் சார்ந்த உலகமும் உண்டு என்கிறது தொல்காப்பியம்.

    மலையும் மலைசார்ந்த நிலமுமான குறிஞ்சி நிலத்தின் தனிப் பெருங் கடவுள் முருகன்தான். அறுபடை வீடுகொண்ட முருகன் குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருப்பவன்.

    * எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்து எழுதியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். அவர் முருகக் கடவுளைத்தான் போற்றுகிறார்.

    'தாமரை புரையும் காமர் சேவடி

    பவழத்தன்ன மேனித் திகழொளி

    குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின்

    நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்

    சேவலங் கொடியோன் காப்ப

    ஏம வைகல் எய்தின்றால் உலகே!'

    தாமரை மலர் போன்ற திருவடியையும் பவழம் போன்ற மேனியையும் குன்றிமணியைப் போல் சிவந்த ஆடையையும் குன்றைப் பிளக்கும்படி எறிந்த வேலையும் சேவல் கொடியையும் உடைய முருகன் காப்பதால் இந்த உலகம் துன்பமின்றி இருக்கின்றது என்பது குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலின் பொருள்.

    * பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை. முற்றிலும் முருகனைப் போற்றியே எழுதப்பட்ட நூல் அது. முந்நூற்றுப் பதினேழு அடிகளில் ஆன நூல். ஆசிரியப்பா என்ற பாவகையில் சங்கப் புலவர் நக்கீரர் எழுதியது.

    முருகனைக் கண்டு திருவருள் பெற்ற ஒரு பக்தர், அவ்விதம் அருள் பெறாதவர்களை முருகனைச் சரணடைந்து அருள் பெறுமாறு ஆற்றுப்படுத்துவதே இந்த ஆற்றுப்படை நூலின் போக்கு. 'நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே!' எனச் சிவபெருமானுடன் சண்டையிட்ட அதே நக்கீரர்தான் முருகனைப் போற்றும் இந்த நூலின் ஆசிரியர்.

    திருமுருகாற்றுப்படை தோன்றிய வரலாறு சுவாரஸ்யமானது. ஒரு மலைச்சாரலில் குளத்தின் கரையில் இருந்த ஓர் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து நக்கீரர் சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது ஓர் அதிசயக் காட்சியைக் கண்டார்.

    ஆலமரத்தின் பழுத்த இலையொன்று ஒரு பாதி தண்ணீரிலும் மறுபாதி தரையிலுமாக விழுந்தது. அடுத்த கணம் தண்ணீரில் விழுந்த பாதி மீன்வடிவமாக மாறியது. தரையில் விழுந்த பாதி பறவை வடிவம் பெற்றது. இரண்டும் ஒன்றையொன்று இழுத்துக் கொண்டிருந்தன.

    இந்தக் காட்சியில் கருத்தைச் செலுத்தியதால் நக்கீரரின் சிவபூஜைக்கு பங்கம் உண்டாயிற்று. அதற்கு முன் இவ்விதம் சிவபூஜையில் பங்கமேற்பட்ட 999 பேரை ஒரு குகையில் அடைத்து வைத்திருந்தது ஒரு பூதம்.

    அவர்களோடு இன்னொருவரை இட்டு நிரப்பி அவர்களின் எண்ணிக்கையை ஆயிரமாக்கி, அதன்பின் அனைவரையும் உண்ண வேண்டும் என்று திட்டமிட்டிருந்தது அது. நக்கீரரையும் அவர்களுடன் அடைத்துவிட்டு உண்பதற்கு முன் நீராடப் போயிற்று பூதம்.

    நக்கீரர் வருகையால் அவரோடு தாங்கள் அனைவரும் இறக்கப் போவதை எண்ணி மற்றவர்கள் அழுது அரற்றினார்கள். அவர்கள் நிலைக்கு இரங்கிய நக்கீரர் முருகனை வேண்டி திருமுருகாற்றுப் படை என்ற செய்யுள் நூலை இயற்றினார்.

    உடனே முருகக்கடவுள் அவர்கள் முன் தோன்றி அவர்கள் அனைவரையும் குகையிலிருந்து விடுவித்துக் காத்தருளினான் என்கிறது திருமுருகாற்றுப்படையின் தோற்றத்தைச் சொல்லும் கதை.

    திருமுருகாற்றுப் படையின் இறுதியில் சில வெண்பாக்கள் காணப்படுகின்றன. அவற்றை இயற்றியவர் நக்கீரரா அல்லது வேறு யாராவது ஒருவரா என்பதைப் பற்றிச் சர்ச்சைகள் நிலவுகின்றன. அந்த வெண்பாக்களின் இலக்கிய அழகு நெஞ்சை அள்ளுகிறது:

    'அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்

    வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் - நெஞ்சில்

    ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்

    முருகா என்று ஓதுவார் முன்!'

    'முருகனே செந்தில் முதல்வனே மாயோன்

    மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்

    தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்

    நம்பியே கைதொழுவேன் நான்!'

    * சங்க கால நூல் போலவே, இடைக்கால நூல் ஒன்றும் முருகன் புகழ் பாடுகின்றது. 'திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்' என்ற அந்நூலை இயற்றியவர் பகழிக் கூத்தர்.

    பிள்ளைத்தமிழ் என்ற இலக்கிய வகை, 96 வகைப் பிரபந்தங்களில் ஒன்று. ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத் தமிழ் எனப் பிள்ளைத் தமிழ் இரண்டு வகைப்படும்.

    'காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்' என்ற பத்துப் பருவங்களை ஆண் குழந்தைக்கு உரியதாக்கிப் பாடுவதே ஆண்பால் பிள்ளைத் தமிழ்.

    பகழிக் கூத்தர் முருகக் கடவுளைக் குழந்தையாக்கி, தாலாட்டுப் பாடி முத்தம் தருமாறு வேண்டி, நிலவைக் காட்டிச் சோறூட்டி என இன்னும் பல வகைகளில் பக்திப் பரவசத்துடன் பாடுகிறார். திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் பக்தி இலக்கிய வரலாற்றில் முத்திரை பதிக்கிறது.

    * காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தில் அர்ச்சகராக விளங்கிய கச்சியப்ப சிவாசாரியார், கந்தபுராணம் முழுவதையும் தமிழில் செய்யுள் நூலாகப் படைத்துள்ளார். குமரக் கோட்டத்தில் அதை நாள்தோறும் ஒரு பகுதியாகப் படித்து அரங்கேற்றினார்.

    அந்த அரங்கேற்றம் முற்றுப்பெற்றபோது, கச்சியப்ப சிவாசாரியாரை பொற்சிவிகையில் அமரவைத்து தொண்டை மண்டலத்து இருபத்து நான்கு வேளாளர்களும் சிவிகையைத் தாங்கி, சாமரம் வீசி வீதிவலம் வந்து நூலையும் ஆசிரியரையும் சிறப்புச் செய்ததாக படிக்காசுப் புலவரின் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.

    * முருகனைப் பற்றிய தோத்திரங்களில் பாலன் தேவராயன் என்ற புலவரால் எழுதப்பட்ட கந்த சஷ்டி கவசம் பெரும்புகழ் பெற்றது. இந்த பாலன் தேவராயன் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் குருவான மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் இன்னொரு மாணவராவார்.

    'சிரகிரி வேலவன் சீக்கிரம் காக்க' என இதில் வரும் வரியில் சிரகிரி என்பது சென்னிமலையைக் குறிப்பது. சென்னிமலை முருகனைக் குறித்துப் பாடப்பட்ட நூல்தான் கந்தசஷ்டி கவசம்.

    தொடக்கத்தில் நேரிசை வெண்பா, அதன்பின் குறள் வெண்பா, அதன்பின் நிலைமண்டில ஆசிரியப்பா என்ற பாவகையில் புனையப்பட்ட இந்நூல் மொத்தம் 238 அடிகளைக் கொண்டது.

    தேவராய சுவாமிகள் தொண்டை மண்டலத்து வல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். கணக்கர் வேலை பார்த்த வீரசாமிப் பிள்ளையின் புதல்வர். 'தணிகாசல மாலை, பஞ்சாக்ர தேசிகர் பதிகம், சேடமலை மாலை' போன்ற நூல்களை தேவராயர் இயற்றியதாகச் சொல்லப்படுகிறது. அவர் நூல்களில் புகழ்பெற்றது கந்த சஷ்டி கவசமே.

    முருகன் நடந்துவரும்போது ஏற்படும் கால்கொலுசின் ஒலியை உற்றுக்கேட்கிறார் தேவராயர். அந்த ஒலியை அப்படியே தம் நூலில் ஒலிக்குறிப்புச் சொற்களாக வைக்கிறார்.

    'செககண செககண செககண செகென

    மொகமொக மொகமொக மொகமொக மொகென

    நகநக நகநக நகநக நகென'

    எனத் தொடங்கி வரும் சொற்கள் மந்திர சக்தி நிறைந்தவை. பாராயணம் செய்பவர்களுக்கு உடல் நலத்தையும் உள்ள நலத்தையும் ஒருங்கே தரக்கூடியவை.

    *சம்ஸ்கிருதத்திலும் முருகனைப் பற்றிய புகழ்பெற்ற தோத்திரங்கள் உள்ளன. ஆதிசங்கரர் அருளிய நூல்களில் முக்கியமான ஒரு நூல் 'ஸதாபால ரூபாபி' எனத் தொடங்கும் சுப்ரமண்ய புஜங்கம். ஆதி சங்கரருக்கு வயிற்று வலி இருந்ததாகவும் அது நீங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு திருச்செந்தூர் முருகள்மேல் அவர் இந்த சுலோகத்தைப் படைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

    அவர் இந்த சுலோகத்தைச் சொல்லத் தொடங்கியபோது திருச்செந்தூர் முருகன் சந்நிதியிலிருந்து ஒரு பாம்பு வெளிப்பட்டு ஊர்ந்து சென்றதாம். அதனால் பாம்பு ஊர்ந்து செல்வதைப் போன்றே வளைந்து வளைந்து அமைந்துள்ள ஓசையில் சங்கரர் இந்நூலைப் படைத்தார்.

    இன்றும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சன்னிதிக்கு முன்பாக இருபுறமும் அமைந்துள்ள தூண்களில் ஒரு தூணில் ஆதிசங்கரர் சிலை செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

    கந்தசஷ்டியன்று முருகனைத் துதித்து இம்மைப் பயன், மறுமைப் பயன் இரண்டையும் பெறலாம்.

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×