என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெண் எம்.எல்.ஏ.வை டார்ச்சர் செய்த அமைச்சர் யார்?- மோதலுக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்
    X

    பெண் எம்.எல்.ஏ.வை 'டார்ச்சர்' செய்த அமைச்சர் யார்?- மோதலுக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்

    • அமைச்சராக இருந்தபோது எவ்வளவோ பிரச்சனைகள் தந்தார்கள்.
    • அரசியலுக்கு வரும் போதே எதையும் துணிச்சலாக சந்திக்க வேண்டும் என்று எனது தந்தை எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில என்ஆர்.காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சந்திரபிரியங்கா தனது சமூக வலைதளத்தில் 12 நிமிடம் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-

    பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனையும் மீறி ஆங்காங்கே ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் தனக்கு நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வந்தது. அதில் பொது இடத்தில் பேனர் வைத்தது தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் கொம்யூன் ஆணையர் மற்றும் அந்த பேனரில் தனது படம் இருந்ததால், தானும் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    விசாரித்ததில் குடும்பம் நடத்தவே கஷ்டப்படும் ஒருவர் இவ்வளவு செலவு செய்து வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் பின்னனியில் அமைச்சர் ஒருவர் இருக்கிறார் என்று தெரிய வந்தது.

    நான் அமைச்சராக இருந்தபோதே, ஏராளமான பிரச்சனைகளை எல்லாம் பார்த்து விட்டுதான், இதெல்லாம் வேண்டாம். நம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வோம் என ஒதுங்கி வருகிறேன்.

    ஆனால் நாம ஒதுங்கனதுக்கு அப்புறமும் ஒரு சுயநலமாக, கன்னிங்கா, தன் கன்ட்ரோலில் வரவில்லை என்பதற்காக, ஒரு பெண்ணை எவ்வளவு டார்ச்சர் பண்ணுவாங்க என்பதற்கு இது ஒரு உதாரணம். நானும் கொஞ்ச நாளா பார்த்து கொண்டு வருகிறேன். ரொம்ப 'டார்ச்சரா' போயிட்டு இருக்கு. நம்மள 'டார்ச்சர்' கொடுக்கலாம். நாம அரசியல்வாதி.

    அரசியலுக்கு வரும் போதே எதையும் துணிச்சலாக சந்திக்க வேண்டும் என்று எனது தந்தை எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார். எதையும் சமாளிக்க தெரியும். அதுக்காக நம்முடன் இருப்பவர்கள் பாதிக்கக்கூடாது. அவர்களை பாதுகாக்க வேண்டும். அதுதான் நல்ல அரசியல்வாதிக்கு அழகு.

    அமைச்சராக இருந்தபோது எவ்வளவோ பிரச்சனைகள் தந்தார்கள். அதையெல்லாம் வெளிக்காட்டிக்காம, நாசுக்காக வெளியே வந்துவிட்டோம். இன்னைக்கும் அந்த அமைச்சர்கள் 'டார்ச்சர்' பண்றாங்க. நான் எல்லோரையும் சொல்லவில்லை.

    ஒன்று, இரண்டு பேர்தான் அப்படி செய்யறாங்க. இதனால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. தேவையில்லாத அலைச்சல். அதாவது நம்மல 'டார்ச்சர்' பண்றாங்களாமாம். ஒரு அமைச்சராக எவ்வளவு வேலை இருக்கும். அமைச்சர் என்பது சாதாரணமானது அல்ல.

    முதலில் எம்.எல்.ஏ., என்பதே சாதாரண விஷயமல்ல. எவ்வளவு கஷ்டங்களை தாண்டி தேர்தலில் ஜெயிக்கிறோம். அதையெல்லாம் ஜெயிச்சதுக்கப்புறம் மறுந்துட்டு, மக்களை மறந்துட்டு, நம்ம கன்ட்ரோலா இல்லன்னா அவங்களை எவ்வளவு டார்ச்சர் வேணும்னாலும் கொடுக்கலாம்.

    அவங்க எம்.எல்.ஏ.,வா இருந்தாலும் சரி. யாரா இருந்தாலும் சரி. 'டார்ச்சர்' பண்ணனும். எனக்கு தெரியலை. எம்.எல்.ஏ., ஒரு ஆம்பளையா இருந்தா பண்ணுவீங்களா? நம்மளா இருப்பதால, நம்பள, நம்ப கூட இருக்கிறவங்கள எல்லாரையும் 'டார்ச்சர்' கொடுக்கறது. தேவையில்லாம வழக்கு போடறது. இதெல்லாம் ரொம்ப வருத்தமா இருக்குது. நாகரீகமான அரசியலா இது இல்லை.

    என்ன பெரிசா ஆயிடப்போவுது. ஒரு பொண்ணு கஷ்டப்பட்டு வளர்ந்து வந்துடக் கூடாது. அய்யய்யோ... அரசியலே வேண்டாம்பா என்ற சொல்றப்படி அவங்களை அசிங்கப்படுத்துறீங்க. இது ஒரு அரசியலா..?

    இந்தமாதரி அரசியல் எல்லாம், எனக்கு என் அப்பா கற்றுத் தரவில்லை. அடுத்தவங்களுக்கு நல்லது செய்யறதை தாண்டி, கெட்டது செஞ்சிடக்கூடாது என சொல்லி வளத்த மனுசனோட பொண்ணு நானு... அதனால், மத்தவங்கள கஷ்டப்படுத்த தோணல...

    இதுதொடர்பாக ஒரு அதிகாரிகிட்ட புகார் கொடுக்கபோனேன். அவரிடம், எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன பண்றதுன்னு நான் கேட்டதும், வேணுமென்றால் ஒன்று செய்யுங்கள். உங்க பெயரில் உள்ள சொத்துகளை மத்தவங்க பெயரில் மாத்திடுங்க.. பாதுகாப்பிற்காக என்கிறார். எந்தளவிற்கு அவர்கள் சொல்லியிருந்தால் அந்த அதிகாரி அப்படி பேசியிருப்பார்.

    எல்லாத்துக்கும் துணிஞ்சிதான் அரசியலுக்கு வந்துள்ளோம். இங்கு ஒன்னே ஒன்னுதான். மக்களுக்கு நல்லது பண்ணனும். பொண்ணா இருந்து சாதிக்கணும்.

    அதைவிட இதுவரை உங்க பெயரை சொல்லாம இருக்கறதுக்கு காரணம் முதல்வர் அய்யா மட்டும் தான். எனது அப்பா ஸ்தானத்தில் இருக்கும் சி.எம்.,க்காக மட்டும் தான் உங்க பெயரை சொல்லாம இருக்கேன். அவருதான் நீ போயி தேர்தல் வேலையை பாரு. வேற எதையும் காதுல வாங்காத என்றார்.

    ஆனா திருப்பி திருப்பி தொந்தரவு பண்ணிட்டு இருக்கும்போது 'அட்லீஸ்ட்' நீங்க என்னை 'டிஸ்டர்ப்' பண்றது எனக்கு தெரியும் என்பது உங்களுக்கு தெரியனும்ல, அதுக்காகத்தான் தயவு செய்து, என்னை 'டார்ச்சர்' செய்யறது விட்டுவிட்டு, உங்களை ஜெயிக்க வைத்த மக்களுக்கு நல்லது செய்யுங்க. அவங்க தான் நமக்கு முதலாளி.

    இப்போதைக்கு போய் நான் மக்கள்கிட்ட நிக்கனும். அவ்வளவுதான். அவங்க பார்த்து நமக்கு ஏதாவது செய்யனும். மத்த யாரும் இப்ப அவசியம் கிடையாது.

    முதல்வர் என்.ஆர். அய்யாவிற்காக மட்டும் தான் எவ்வளவோ பொறுத்து போய் கொண்டுள்ளேன். பாவம், அவரே நிறைய பொறுத்துக கொண்டு தான் போய் கொண்டிருக்கிறார்.

    இதையெல்லாம் மனசுலு வைத்துக் கொண்டு, அமைச்சர்கள் கொஞ்சம் அமைதியா, இன்னும் 8 மாசம் தான் உள்ளது. தேர்தல் வேலையை பார்த்தா நல்லா இருக்கும். மக்களுக்கு ஏதாவது வேலைய பாருங்க... என்னையும் வேலை பார்க்க விடுங்க. என்னை நம்பி நிறைய பேர் உள்ளனர்.

    தேவையில்லாம அலைய விடாதிங்க. இதுக்கு மேலேயும் இப்படிதான் பண்ணுவீங்கன்னா... பொம்பளைன்னு பாக்காதீங்க. எல்லா தொகுதிகளிலும், பெண்கள் ஓட்டு அதிகம். பெண்களுக்கு நல்லாவே தெரியும். நான் யாரை சொல்றேன் என்று கண்டுபிடித்திருப்பார்கள்.

    அது அவ்வளவா நல்லா இருக்காது. அவ்வளவுதான். பார்த்துக்கோங்க. நீங்களும் வாழுங்க... என்னையும் வாழ விடுங்க... நன்றி..!!

    இவ்வாறு சந்திரபிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.

    சந்திர பிரியங்கா முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

    ஆளும் கட்சியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.வே அமைச்சர்களுக்கு எதிராக பரபரப்பு வீடியோ வெளியிட்டிருப்பது புதுச்சேரி அரசியலில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சந்திரபிரியங்காவை 'டார்ச்சர்' செய்த அமைச்சர் யார் என்றும் அவர்கள் மோதலுக்கான காரணம் என்னவென்றும் பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

    Next Story
    ×