search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடும் பனிமூட்டத்தால் வேன் பாறையில் மோதி விபத்து- அய்யப்ப பக்தர்கள் 4 பேர் பலி
    X

    கடும் பனிமூட்டத்தால் வேன் பாறையில் மோதி விபத்து- அய்யப்ப பக்தர்கள் 4 பேர் பலி

    • வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்தை கண்டு உடனடியாக குண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • காயமடைந்த பக்தர்கள் 19 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், நீலிப்புடி கிராமத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 23 பேர் மாலை அணிந்து விரதம் இருந்தனர். கடந்த 1-ந் தேதி சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சபரிமலைக்கு சென்ற அவர்கள் தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் நேற்று ரெயில் மூலம் தெனாலிக்கு வந்தனர்.

    தெனாலியில் வாடகைக்கு வேன் எடுத்துக் கொண்டு ஐயப்ப பக்தர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர். வேனை நாகபாபு என்பவர் ஓட்டிச் சென்றார். நேற்று இரவு ஜப்பானி என்ற இடத்தில் வேன் சென்று கொண்டு இருந்தது. சாலையே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவியதால் ஒரு கையில் கண்ணாடியை துடைத்தபடி டிரைவர் வேனை ஓட்டி சென்றார்.

    இரவு நேரம் என்பதால் வேனில் இருந்த அய்யப்ப பக்தர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.அப்போது வேன் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பெரிய பாறை மீது வேகமாக மோதியது. இதில் வேனின் முன் பகுதி நொறுங்கியது.

    இதில் ஈடுபாடுகளில் சிக்கிய அய்யப்ப பக்தர்கள் அலறி கூச்சலிட்டனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்தை கண்டு உடனடியாக குண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் பாண்டுரங்க ராவ் (வயது 45), ரமேஷ் (55), பவன் குமார் (21), பி. ரமேஷ் (42) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். அவர்களின் உடல்களை போலீசார் மீட்டனர்.

    மேலும் காயமடைந்த பக்தர்கள் 19 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×