என் மலர்
இந்தியா

ஆந்திராவில் ஜெயில் வார்டனை தாக்கி விட்டு 2 கைதிகள் தப்பி ஓட்டம்
- சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கைதிகளை தேடி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், அனக்கப்பள்ளி மாவட்டம், சோடவரத்தில் கிளை சிறை உள்ளது. இந்த சிறையில் வீரராஜு என்பவர் வார்டனாக வேலை செய்து வருகிறார்.
சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஓய்வூதிய பண மோசடி வழக்கில் ரவிக்குமார், திருட்டு வழக்கில் பெஜவாடா ராமு ஆகியோரை போலீசார் கைது செய்து இந்த ஜெயிலில் அடைத்தனர்.
நேற்று மாலை ஜெயிலில் நுழைவு வாயில் அறையில் வார்டன் வீரராஜு இருந்தார். அப்போது ரவிக்குமார், ராமு இருவரும் சேர்ந்து சினிமா பாணியில் சுத்தியலால் வீரராஜு தலையில் சரமாரியாக தாக்கினார்கள்.
இதில் நிலை குலைந்து போன வீரராஜு வலி தாங்க முடியாமல் அலறியபடி மயங்கி சரிந்து கீழே விழுந்தார். அவரது பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்தனர். கைதிகள் இருவரும் முன்பக்க கதவை திறந்து தப்பி ஓடினர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கைதிகளை தேடி வருகின்றனர். கைதிகள் வார்டன் ராஜுவை தாக்கும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.






