

சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் புகைப்படங்களை எடுத்து மார்பிங் செய்து மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்நிலையில் அசாம் போலீசார் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட சில குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து ஒரு பதிவை செய்துள்ளனர்.
அதில், உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சமூக ஊடகங்களில் உங்கள் குழந்தையை பற்றி நீங்கள் என்ன பகிர்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பற்றிய அதிகப்படியான தகவல்களை வெளியிடுவது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். அவர்களது இந்த பதிவு டுவிட்டரில் வைரலாகிய நிலையில், காவல் துறையின் பதிவிற்கு பயனர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.