search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருபுவனையில் தனியார் நிறுவன ஊழியர் மர்ம மரணம்
    X

    திருபுவனையில் தனியார் நிறுவன ஊழியர் மர்ம மரணம்

    திருபுவனையில் தனியார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருபுவனை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த கெங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. (வயது 39). இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை.

    திருப்பதி கடந்த 6 மாதமாக திருபுவனையில் உள்ள நைலான் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். தொழிற்சாலையில் உள்ள குடியிருப்பில் தங்கி அவர் வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் திருப்பதி வெளியே எங்கும் செல்லாமல் தொழிற்சாலை குடியிருப்பில் இருந்தார்.

    மாலையில் இதே தொழிற்சாலையில் பணிபுரியும் அந்தோணி என்பவர் திருப்பதியை பார்க்க வந்தார். அப்போது திருப்பதி பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் தொழிற்சாலை காவலாளி உதவியுடன் திருப்பதியை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே திருப்பதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு ஆகியோர் மர்ம சாவாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×