என் மலர்


யாதும் அறியான்
வித்தியாசமான சைக்கோ திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.
கதைக்களம்
நாயகனான தினேஷ் மிகவும் கூச்சசுபாவத்துடன் இருக்கும் ஒரு Introvert-ஆக இருக்கிறார். நாயகன் தினேஷும், நாயகி பிரானாவும் காதலிக்கிறார்கள்.
காதலியுடன் ஜாலியாகவும், நெருக்கமாகவும் இருக்க வேண்டும் என்று தினேஷ் ஆசைப்படுகிறார். ஆனால், கண்ணத்தில் முத்தம் கொடுப்பதற்கே அனுமதி மறுக்கும் பிரானா, மற்ற விசயங்கள் திருமணத்திற்குப் பிறகு தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
தனது வரட்சியான காதல் பற்றி நண்பரிடம் கவலைப்படும் தினேஷுக்கு அவரது நண்பர் ஒரு யோசனை சொல்கிறார். அதன் படி தினேஷ், பிரானா அவரது நண்பர் மற்றும் அவரது காதலி என அனைவரும் ரிசார்ட் ஒன்றுக்கு டிரிப் செல்கின்றனர்.
நண்பரின் யோசனைப்படி தனது காதலியுடன் உடலுறவு கொள்ள நாயகன் தினேஷ் முயற்சிக்கிறார். முதலில் மறுக்கும் பிரானா அதன் பிறகு தினேஷுடன் இணைந்து விடுகிறார். அதன் பிறகு தினேஷ் எதிர்பாராத விஷயம் ஒன்று நடக்கிறது அதனால் மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார் தினேஷ். இதற்கு அடுத்து என்ன ஆனது? தினேஷ் மாட்டிக்கொண்ட பிரச்சனை என்ன? எப்படி அதிலிருந்து வெளியே வந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
அறிமுக நாயகன் தினேஷ், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு காதலியிடம் அவர் செய்யும் சில்மிஷங்கள் ரசிக்கும்படி அமைந்துள்ளது. முதல் பாதியில் அப்பாவியாக நடிப்பவர், இரண்டாம் பாதியில் அவரா இவர்!, என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பிரானா, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் பாண்டி, அவரது காதலியாக நடித்திருக்கும் ஷ்யாமல், விடுதி பணியாளராக நடித்திருக்கும் அப்புக்குட்டி என அனைவரும் அளவாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இயக்கம்
ஒரு எளிமையான கதைக்கருவை வைத்துக்கொண்டு, பல திருப்பங்கள் மூலம் வித்தியாசமான சைக்கோ திரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் எம்.கோபி-க்கு பாராட்டுகள்.
நாயகனை சுற்றி நடக்கும் அனைத்து மர்மங்களுக்குப் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது, என்று எதிர்பார்ப்பை கொடுக்கும் இயக்குநர் கோபி அதை அவரே படத்தின் இறுதியில் உடைத்தது படத்தின் பலவீனமாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் எல்.டி வனப்பகுதியில் இருக்கும் பழைய சொகுசு விடுதியை பார்வையாளர்களுக்கு பீதி ஏற்படும் வகையில் காட்சிப்படுத்தியிருபக்கிறார்.
இசை
இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் இசையில் பாடலும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
தயாரிப்பு
Breaking Point Pictures தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.









