என் மலர்


உழைப்பாளர் தினம்
சொந்த ஊரை விட்டு கடல் கடந்து சென்று உழைப்பவர்களின் வாழ்வியலை சொல்லும் கதை.
கதைக்களம்
குடும்ப சூழ்நிலை காரணமாக சொந்த ஊரை விட்டுவிட்டு பல வருடங்களாக சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன். இவருக்கு சொந்த ஊரில் கடை ஒன்றை கட்ட வேண்டும் என்பது கனவு. இந்நிலையில் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணமான இரண்டு வாரங்களில் மீண்டும் சிங்கப்பூர் பயணிக்கும் அவர், அங்கு தனது சொந்த கடை கனவுக்காக கடுமையாக உழைக்கிறார்.
அதே சமயம் அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதையறிந்த சந்தோஷ் நம்பிராஜன், தன்னால் உடனடியாக ஊருக்கு கிளம்ப முடியாத சூழலில் சிக்கி தவிக்கிறார்.
இறுதியில் சந்தோஷ் நம்பிராஜன் சொந்த ஊருக்கு திரும்பினாரா? கடை கட்டும் கனவு நிறைவேறியதா?, மனைவிக்கு என்ன ஆனது? என்பதை படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் நம்பிராஜன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் இதற்குமுன் நடித்த ‘டூலெட்’, ‘காதலிசம்’, ‘வட்டார வழக்கு’ ஆகிய படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தது போல், இதிலும் நடித்து இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை குஷி, ஓரளவிற்கு குறை சொல்ல முடியாத அளவிற்கு நடித்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
சொந்தங்களை விட்டு கடல் கடந்து சென்று உழைப்பவர்கள், கடுமையான உழைப்பு மூலம் உடல் ரீதியாக மட்டும் இன்றி மனதளவிலும் எத்தகைய வலி மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன். அழுத்தமான காட்சிகள் மற்றும் சுவாரஸ்யமான காட்சிகள் புகுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். நல்ல கதையை தெளிவு இல்லாமல் சொல்லி இருக்கிறார்.
இசை
மசூத் ஷம்ஷாவின் இசையில் பாடல்கள் பெரியதாக எடுபடவில்லை. பின்னணி இசை பலவீனம்.
ஒளிப்பதிவு
சதீஷ் துரைகண்ணுவின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.








