என் மலர்


ரூல் நம்பர் 4
காதலியுடன் ஒன்று சேர போராடும் இளைஞன் குறித்த கதை.
கதைக்களம்
தனியார் வங்கி ஒன்றில் ஏடிஎம் வேன் டிரைவராக வேலை பார்க்கிறார் நாயகன் பிரதீஸ். இவர் குலதெய்வ கோவில் வழிபாட்டிற்காக ஊருக்கு சென்ற நேரத்தில் நாயகி ஸ்ரீகோபிகாவை பார்த்ததும் காதலில் விழுகிறார். இவர் காதலை முதலில் ஏற்க மறுக்கும் நாயகி பிறகு ஏற்கிறார்.
ஒரு கட்டத்தில் தான் காதலிப்பது ஏடிஎம் செக்யூரிட்டி மோகன் வைத்யாவின் மகள் என்று பிரதீஸ்க்கு தெரிய வருகிறது. ஏடிஎம் பணம் எடுத்து செல்லும் மேல் அதிகாரியான ஜீவா ரவியிடம் தன் காதலை சேர்த்து வைக்க உதவி கேட்கிறார் பிரதீஸ்.
இந்நிலையில் பிரதீஸ் மற்றும் குழுவினர் ஒரு அவசர தேவைக்காக 5 கோடி ரூபாய் பணத்தை எடுத்து செல்ல 4 பேர் கொண்ட கொள்ளைக்கார கும்பல் வேனை கடத்துகிறது. இதே நேரத்தில் வனத்துறை அதிகாரியாக இருக்கும் பிர்லா போஸ் அந்த பணத்தை கொள்ளையடிக்க நினைக்கிறார்.
இறுதியில் பிரதீஸ் 5 கோடி ரூபாய் பணத்தை மீட்டாரா? இல்லையா? காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஏகே பிரதீஸ் கிருஷ்ணா இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தையும் சிறப்பாக செய்ய முயற்சி செய்து இருக்கிறார். நாயகி ஸ்ரீகோபிகா அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
செக்யூரிட்டியாக நடித்திருக்கும் மோகன் வைத்யா, மேல் அதிகாரியாக வரும் ஜீவா ரவி. வனத்துறை அதிகாரியாக வரும் பிர்லா போஸ் என அனைவரும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
பணம் எடுத்து செல்லும் வாகனத்தை கொள்ளையடிக்கும் படங்கள் நிறைய பார்த்திருப்போம். ஆனால் இதில் கொஞ்சம் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார் இயக்குனர் பாஸர். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இசை
கெவின் டெகாஸ்டா இசையில் வரும் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். தீரஜ் சுகுமாறன் பின்னணி இசை கதை நகர்விற்கு துணை நிற்கிறது.
ஒளிப்பதிவு
டேவிட் ஜான் ஒளிப்பதிவில் அடர்ந்த காடுகளையும் மலைகளையும் நேர்த்தியாக படமாக்கி இருக்கிறார்.
புரொடக்ஷன்
YSIMY நிறுவனம் ‘ரூல் நம்பர் 4’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.









