என் மலர்


நூடுல்ஸ்
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் சில ஈகோ போலீஸ் அதிகாரிகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை நூடுல்ஸ்.
உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளரான ஹரிஸ் உத்தமன் இரவு மனைவி மகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் மொட்டை மாடியில் ஒன்றாக அமர்ந்து ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது திடீரென போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன், ஏட்டு சோபன் மில்லருடன் வந்து அவர்களை எச்சரிக்கிறார்.

ஹரிஸ் உத்தமன் அவரை தட்டிக் கேட்க ஈகோவாக எடுத்துக்கொண்டு ஹரிசை பழிவாங்க துடிக்கிறார் மதன். அதன்பின் ஹரிஸ் உத்தமன் வீட்டில் நடக்கும் பிரச்சினையால் போலீசிடம் போக வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இறுதியில் ஹரிஸ் உத்தமன் வீட்டில் நடந்த பிரச்சினை என்ன இன்ஸ்பெக்டர் பழி வாங்கலில் இருந்து ஹரிஸ் உத்தமன் தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஸ் உத்தமன், குடும்பத்தை பாதுகாத்து போலீஸ் அதிகாரியின் பழிவாங்கலுக்கு உட்படும் நடிப்புக்கு கை தட்டலாம். நடிப்பை கண்களினாலே வெளிப்படுத்தி எதார்த்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் ஷீலா ராஜ்குமார். வழக்கறிஞராக வரும் வசந்த் மாரிமுத்துவின் பயம் கலந்த நடிப்பு ரசிக்க வைக்கிறது. கொடூர போலீஸ் அதிகாரியாக வரும் நடிகரும் இயக்குனருமான மதன் மிரட்டி இருக்கிறார்.

ஒரு இரவில் ஆரம்பித்து மறுநாள் காலை வரை ஒரு வீட்டில் கதையை முடித்து கச்சிதமாக காட்சி படுத்தியிருக்கும் இயக்குனர் மதனின் திறமை பாராட்டுக்குரியது. நல்ல கதைக்கு பெரிய பணம் தேவையில்லை என்பதற்கு இந்த படம் ஒரு எடுத்துக்காட்டு.

வினோத் ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். ஒரு காட்சியை தவிர வீட்டை விட்டு கேமரா வெளியில் செல்லவே இல்லை. ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை கதையோடு பயணித்து இருக்கிறது.
மொத்தத்தில் நூடுல்ஸ் - சுவைக்கலாம்.









