என் மலர்


நிழற்குடை
வளர்ந்து வரும் இந்த அவசர சமூகத்தில் குழந்தை வளர்ப்பை மையமாக வைத்து பேசிருக்கும் திரைப்படம்
கதைக்களம்
கதாநாயகியான தேவயானி இலங்கையில் இருந்து வந்தவர் இங்கு ஒரு அனாதை ஆசிரமத்தில் பணிபுரிந்து வருகிறார். மறுபக்கம் விஜித் மற்றும் கன்மணி மனோகரன் தம்பதிக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகவேண்டும் என்பது கனவு அதற்காக இரவு பகல் பாராது இருவரும் ஐடி கம்பெனியில் வேலைப்பார்த்து வருகின்றனர். இதனால் குழந்தை பாதுகாலரிடம் மகள் வளர்ந்து வருகிறார். ஆனால் குழந்தை பாதுகாவலாளி சரியில்லாத காரணத்தினால் அந்த பணிக்கு தேவயானி வருகிறார். பெண் குழந்தைக்கும் தேவயானிக்கும் இடையே நல்ல பந்தம் உருவாகிறது. ஒரு தாய் போன்ற உறவை அந்த குழந்தையிடம் இருந்து தேவயானி பெறுகிறார். இவர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பில் ஒரு சைக்கோ போல் ஒரு இளைஞன் இருக்கிறான் அவன் இந்த பெண் குழந்தை மீது ஒரு கண் இருக்கிறது. ஒரு நாள் அந்த சிறுமி காணாமல் போகிறாள். அதற்கு காரணம் யார்? சிறுமியை கண்டு பிடித்தார்களா? இந்த தம்பதி வெளிநாட்டிற்கு சென்றார்களா? தேவயானிக்கும் சிறுமி தொலைந்து போனதற்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
தேவயானி மிக அருமையான அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குழந்தையிடம் பாசமாக பழகுவது, குழந்தையை பிரியும் காட்சிகளில் நெகிழ வைத்துள்ளார். விஜித் மற்றும் கண்மணி மனோகரன் இருவரும் எதார்த்த தம்பதிகளை பிரதிபலித்து நடித்துள்ளனர்.
ராஜ்கபூர், வடிவுக்கரசி, இளவரசு, நீலிமா ராணி , தர்ஷன் ஆகியோர் அவர்களது பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
இந்த நவீன உலகத்தில் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநரான சிவா ஆறுமுகம். படத்தின் மையக்கதைக்கு வருவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது பலவீனம். படத்தில் பல காட்சிகள் கதைக்கு ஒட்டாமல் இருந்தது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும்.
ஒளிப்பதிவு
ஆர் பி குருதேவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது.
இசை
நரேன் பாலகுமார் இசை சுமார் ரகம், எந்த பாடலும் மனதில் பதியவில்லை.
தயாரிப்பு
இப்படத்தை தர்ஷன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.











