என் மலர்


மகாசேனா
கோவில் சிலையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் மகாசேனா.
குரங்கணி மலைப்பகுதியில் யாழி கிராம மக்களுக்கும் அடிவார பகுதி மக்களுக்கும் 3000 ஆண்டுகால பகை இருந்து வருகிறது. குறிப்பாக யாழி கிராமத்தில் இருக்கும் சாமி சிலையை அடிவார பகுதி மக்கள் அபகரிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார்கள். யாழி கிராமத்தைச் சேர்ந்த நாயகன் விமல் கிராம மக்களுக்கும் சாமி சிலைக்கும் பாதுகாவலனாக இருந்து வருகிறார்.
யாழி கிராமத்தில் சித்ரா பௌர்ணமி அன்று கோவில் திருவிழா நடத்த முயற்சி செய்கிறார்கள். அன்றைய தினத்தில் அடிவார பகுதி மக்கள், சாமி சிலையை திருட நினைக்கிறார்கள். அதே சமயம் மற்றொரு கும்பல் சாமி சிலையை வனப்பகுதி காவல் அதிகாரி ஜான் விஜய் மூலம் திருட திட்டம் போடுகிறார்கள்.
இறுதியில் யாழி கிராமத்தில் திருவிழா நடைபெற்றதா? சாமி சிலை என்ன ஆனது? சாமி சிலையை விமல் பாதுகாத்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விமல் மிகவும் சாதாரணமாக நடித்திருக்கிறார். பல இடங்களில் நடிக்காமல் பொம்மை போல் நிற்கிறார். செங்குட்டுவன் என்ற பெயரில் இருக்கும் கம்பீரம் நடிப்பில் இல்லை. நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பொம்மி என்ற கதாபாத்திரத்தில் சாதாரண பெண்ணாகவும் ஆக்ரோஷமான பெண்ணாகவும் நடித்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இவரது நடிப்பு மட்டுமே படத்திற்கு பெரிய பலம்.
வனத்துறை அதிகாரியாக வரும் ஜான்விஜய் படம் முழுவதும் கத்திக் கொண்டே இருக்கிறார். யோகி பாபுவின் காமெடி பெரியதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. வில்லனாக நடித்திருக்கும் கபீர் சிங் கடைசி பத்து நிமிடமே மட்டுமே வந்து கவனத்தை பெற்று இருக்கிறார். அடிவார பகுதி மக்கள் தலைவியாக வரும் மகிமா குப்தா அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இயக்கம்
கோவில் சிலையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன். தெளிவான திரைக்கதை இல்லாமல் படத்தை நகர்த்திருக்கிறார் இயக்குனர். காட்சிகளின் தொடர்ச்சி இல்லாதது வருத்தம். கதாபாத்திரங்களிடையே வேலை வாங்காமல் விட்டிருக்கிறார். நிறைய லாஜிக் மீறல்கள், சம்மந்தம் இல்லாத காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.
இசை
பிரவீன் குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை ஒரு சில இடங்களில் மட்டுமே ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
மனாஸ் பாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். இவரது கேமரா மலைப்பகுதிகளை அழகாக படம் பிடித்து இருக்கிறது.











