என் மலர்
சினிமா செய்திகள்

சார்பட்டா 2 படப்பிடிப்பு எப்போது?.. என்ன அரசியல் பேசும்? - பா.ரஞ்சித் பதில்
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
1960- களில் வடசென்னையில் உள்ள இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குழுக்களுக்கும் இடையிலான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் அந்த பகுதியில் உள்ள குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதில் உள்ள அரசியலையும் காட்டியிருந்தனர்.
இதையடுத்து சமீபத்தில் 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பா.இரஞ்சித் இயக்கும் இப்படத்தை நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்ஷன்ஸ், தி ஷோ பீபுள் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் பா. இரஞ்சித், "சார்பட்டா - 2 கதையை எழுதி முடித்துவிட்டோம். ஒரு சில மாறுதல்களை மேற்கொண்டபின் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம்.
இந்த படமும் மிக முக்கியமான அரசியல் காலகட்டத்தையே பேசுகிறது. குத்துச்சண்டைக்கான காட்சிகளும் நன்றாக வந்திருக்கிறது. பலருக்கும் இக்கதை பிடிக்கும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
தற்போது வேட்டுவன் என்ற படத்தை பா.ரஞ்சித் இயக்கி வரும் நிலையில் இதன் பின் சார்பட்டா 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






