என் மலர்tooltip icon

    கடகம்

    2025 ஆவணி மாத ராசிபலன்

    கடக ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியில் விரயாதிபதி புதன் சஞ்சரிக்கிறார். மேலும் அஷ்டமத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சனி வக்ரம் பெற்றிருப்பதால் ஓரளவிற்கு நன்மை கிடைக்கும் என்றாலும் விரயங்களைக் கட்டுப்படுத்த இயலாது. திட்டமிட்டபடி காரியங்களை முடிக்க பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை உண்டு. இடமாற்றம், வீடு மாற்றம் எதிர்பாராத விதம் அமையும். குருவின் பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் குரு வழிபாட்டை முறையாக மேற்கொண்டால், உங்களுக்குரிய பாக்கியங்களும், அனைத்து நலன்களும் வந்துசேரும். ராகு-கேதுக்களுக்குரிய வழிபாடுகளை முறையாக மேற்கொண்டால் தடைகள் விலகும்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11-க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்கும் இந்த நேரம் பொருளாதார நிலை உயரும். புதிய திருப்பங்கள் ஏற்படும். வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களுக்கு அது கைகூடி வருவதற்கான அறிகுறிகள் தென்படும். ரண சிகிச்சையில் சிக்கித் தவித்தவர்களுக்கு இப்பொழுது விடிவு காலம் பிறக்கப்போகிறது. மாற்று மருத்துவங்கள் ஒரு சிலருக்கு கைகொடுக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்தியங்க முற்படுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அடகுவைத்த நகைகளை மீட்டுக்கொண்டுவரும் வாய்ப்பு உருவாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கும், அதன் மூலம் நல்ல பொறுப்புகளும் கிடைக்கும்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் பொழுது உடன்பிறப்புகளால் விரயம் ஏற்படும். அவர்களின் கடன்சுமை குறைய வழிவகுத்துக் கொடுப்பீர்கள். அல்லது அவர்களின் கல்யாணம் போன்றவற்றை முன்னின்று நடத்த செலவிடுவீர்கள். நாடு மாற்றம் பற்றியும், வீடு மாற்றம் பற்றியும் சிந்திக்கும் நேரம் இது. நாகரிகப் பொருட்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும், மேலதிகாரிகளும் உங்கள் செயல்பாடுகளைக் கண்டு ஆச்சரியப்படுவர். சமூக சேவையில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் பொருளாதார நிலை உயரும்.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் பொழுது துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். நல்ல நிகழ்ச்சிகள் இல்லத்தில் படிப்படியாக நடைபெறும். வீடு கட்டுவது அல்லது வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். சொத்து விற்பனையால் லாபம், வியாபாரப் போட்டிகள் அகலும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் பொருளாதாரம் உச்சநிலை அடையவும், பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தவும், தேக்க நிலையில் இருந்த தொழில் சிறப்பாக நடைபெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மிதமிஞ்சிய லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். சுபகாரியம் இல்லத்தில் நடைபெறும் நேரம் இது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 17, 18, 23, 24, 28, 29, செப்டம்பர்: 9, 10, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    ×