உலகம்

ரஷியாவின் வாக்னர் குழுவுக்கு இங்கிலாந்து தடை

Published On 2023-09-06 15:51 IST   |   Update On 2023-09-06 15:51:00 IST
  • வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக இங்கிலாந்து அரசு அறிவித்தது.
  • வாக்னர் குழுவின் சொத்துக்களை பயங்கரவாத சொத்து என வகைப்படுத்தி பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்:

ரஷியாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படை, உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்று ரஷிய ராணுவத்துக்கு உதவியது. இதற்கிடையே ரஷிய அரசுக்கு எதிராக வாக்னர் குழு திடீரென்று கிளர்ச்சியில் ஈடுபட முயன்று பின்னர் அதை கைவிட்டது.

இந்த நிலையில் வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக இங்கிலாந்து அரசு அறிவித்தது. அந்த குழுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்னர் குழுவில் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது சட்டவிரோதமானது என்றும், அக்குழுவின் சொத்துக்களை பயங்கரவாத சொத்து என வகைப்படுத்தி பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து உள்துறை மந்திரி சுயெல்லா பிராவர்மேன் கூறும்போது, வாக்னர் குழு, ரஷிய அதிபர் புதினின் ராணுவ கருவியாகும். அது வன்முறை மற்றும் அழிவுகரமானது. உக்ரைன் மற்றும் ஆப்பிரிக்காவில் வாக்னர் குழுவின் செயல்பாடு உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆகும் என்றார்.

Tags:    

Similar News