உலகம்

பாகிஸ்தானில் கோர்ட்டில் மகளை சுட்டுக்கொன்ற தந்தை

Published On 2023-01-24 10:18 IST   |   Update On 2023-01-24 10:18:00 IST
  • கோர்ட்டு அறையில் இளம்பெண் மீது தந்தை துப்பாக்கியால் சுட்டார்.
  • துப்பாக்கியால் சுட்ட தந்தையை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கராச்சி:

பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் வஜிரிஸ்தான் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தந்தையின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.

அந்த இளம்பெண் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த டாக்டரை சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதனால் அப்பெண் மீது தந்தை கடும் ஆத்திரத்தில் இருந்தார்.

இளம்பெண் தனது கணவருடன் கராச்சியின் பிரபாத் பகுதியில் வசித்தார். இந்த நிலையில் காதல் திருமணம் செய்த அப்பெண் கராச்சி நகர கோர்ட்டில் தான் சுதந்திரமாக திருமணம் செய்து கொண்டதை உறுதிப்படுத்துவதற்காக வாக்குமூலம் அளிக்க வந்தார். அங்கு அவரது தந்தையும் வந்திருந்தார்.

அப்போது கோர்ட்டு அறையில் இளம்பெண் மீது தந்தை துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார்.

துப்பாக்கியால் சுட்ட தந்தையை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஷபீர் சேதர் கூறும்போது, கவுரவ கொலையின் பின்னணியில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தந்தை, கணவர், சகோதரர் அல்லது வேறு ஆண் உறவினர் உள்ளனர் என்றார்.

Tags:    

Similar News