உலகம்

போராட்டக்காரர்கள் தீ வைப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைப்பு - இலங்கையில் பரபரப்பு

Published On 2022-07-09 16:23 GMT   |   Update On 2022-07-09 16:23 GMT
  • அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக கோரி அவர்களது இல்லங்களை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
  • போராட்டத்தின் எதிரொலியாக ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

கொழும்பு:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். மக்களின் போராட்டத்தால் ராஜபக்சே குடும்பத்தினருக்கு கடும் எதிர்ப்பு தொடர்ந்தது. இதனால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததால், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.

அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே மறுத்துவிட்டதால் அவருக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்தபடி இருக்கிறது.

பொருளாதார நெருக்கடி தீராததால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக கோரி இன்று தலைநகர் கொழும்பில் பொதுமக்கள் சார்பில் போராட்டம், பிரமாண்ட பேரணி நடந்தது.

கொழும்புக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்ட்த்திலும் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையே, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மக்கள் நலன் கருதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் பொருட்களை உடைத்து தீ வைத்ததாக இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயற்சித்தனர்.

Tags:    

Similar News