உலகம்

நுரையீரல் பாதிப்பு: 38 நாட்களுக்கு பிறகு போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்

Published On 2025-03-23 11:17 IST   |   Update On 2025-03-23 11:17:00 IST
  • பரிசோதனையில் 2 நுரையீரலிலும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டது.
  • வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

வாடிகன் சிட்டி:

போப் ஆண்டவர் பிரான்சிஸ், உடல்நல பாதிப்பால் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி, இத்தாலியில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடந்த பரிசோதனையில் 2 நுரையீரலிலும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின்போது 2 முறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை சந்தித்தார். தீவிர சிகிச்சை மூலம் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் அபாய கட்டத்தை தாண்டி இருந்தார்.

கடந்த 6-ந்தேதி போப் பிரான்சிஸ் ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டார். அதன்பின் 16-ந்தேதி அவரது புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டது.

இந்த நிலையில் போப் பிரான்சிஸ் இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். இதுதொடர்பாக டாக்டர்கள் கூறும்போது, போப் பிரான்சிஸ் உடல் நிலை சீராக உள்ளது. இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.

அவர் ஒரு மாதத்துக்கு மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2 மாதங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும். அவர் பெரிய கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.

38 நாட்களுக்கு பிறகு போப் பிரான்சிஸ் இன்று ஆஸ்பத்திரியில் இருந்து திரும்புகிறார். வாடிகனில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்புவதற்கு முன்பு ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்தவாறு போப் ஆசீர்வாதம் வழங்குவார் என வாடிகன் தெரிவித்து உள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் முதல்முறையாக பொது வெளியில் மக்களை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News