உலகம்

சீன உளவு கப்பல் 

2014 ஆம் ஆண்டே சீன உளவு கப்பல் இலங்கை வந்துள்ளது- சீன தூதர் தகவல்

Published On 2022-08-16 10:18 GMT   |   Update On 2022-08-16 11:19 GMT
  • அனைத்து நாடுகளுடன் உறவு முக்கியம் என இலங்கை தகவல்.
  • அண்மை நாடுகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை என வெளியுறவுத்துறை அறிக்கை.

சீனாவின் உளவுக் கப்பல் யுவான் வாங்-5 இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு காலை 8.20 மணியளவில் வந்தடைந்தது. துறைமுகத்தில் உளவுக்கப்பலை இலங்கைக்காக சீன தூதர் இகி ஷென்காங் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சீனத்தூதர், இலங்கைக்கு சீன ஆராயச்சிக் கப்பலின் வருகை இயற்கையானது என்றார். இது போன்ற ஒரு கப்பல் 2014ம் ஆண்டு இலங்கை வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த கப்பல் வருகை குறித்த இந்தியாவின் எதிரப்பு குறித்து தமக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்துல குணவரதன, சீன உளவுக்கப்பல் வருகை குறித்த பிரச்சினை சுமூக தீர்க்கப்பட்டதாக தெரிவித்தார். எல்லா நாடுகளுடனான உறவுகள் தங்களுக்கு முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் சீன உளவு கப்பல் வருகை விவகாரத்தில் அண்டை நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கு இலங்கை முன்னுரிமை அளிப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இம்மாதம் 22 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படும் சீன உளவுக் கப்பலுக்குள் செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அம்பாந்தோட்டை துறைமுகப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே கடந்த 2014 ஆண்டு அணுசக்தியால் இயங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதி அளித்திருந்தது. இதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இரு தரப்பு உறவுகள் இடைய விரிசல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News