செய்திகள்
பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ராவை பதவியில் இருந்து விலக்க வேண்டும் -ஐ.நாவுக்கு பாகிஸ்தான் கடிதம்

Published On 2019-08-22 08:31 IST   |   Update On 2019-08-22 08:31:00 IST
ஐநாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் யூனிசெப் நல்லெண்ணத் தூதராக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டும் என பாகிஸ்தான் ஐ.நாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இஸ்லாமாபாத்:

உலகம் முழுவதும் உள்ள பெண் பிள்ளைகளின் கல்வி, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்தல், எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சிறுவர், சிறுமியரின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக உலக நாடுகளின் பங்களிப்புடன் யூனிசெப் தொண்டாற்றி வருகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் இந்த நிதியத்தின் உலகளாவிய நல்லெண்ணத் தூதராக (Global Goodwill Ambassador) பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2016ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.



இந்நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பிரியங்கா ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் புல்வாமா தாக்குதலின்போதும் இந்திய வீரர்களுக்கு ஆதரவாக பிரியங்கா தனது டுவிட்டரில் கருத்து பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சனை எழும்போது, பிரியங்கா ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரை நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்து, பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை மந்திரி ஷெரின் மசாரி, ஐ.நாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Similar News