செய்திகள்

ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு

Published On 2018-09-10 11:34 GMT   |   Update On 2018-09-10 11:34 GMT
ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ தீவை கடந்த வாரம் தாக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 44 ஆக அதிகரித்துள்ளது. #Japanquake #Hokkaidoquake
டோக்கியோ:

ஜப்பான் நாட்டை கடந்த 4-ந் தேதி தாக்கிய ‘ஜெபி’ புயலால் ஏற்பட்ட பாதிப்பு மறைவதற்குள் கடந்த 6-ம் தேதி அதிகாலை  3.08 மணிக்கு ஹொக்கைடோ தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை அதிர்வுகள் ஏற்பட்டன.

மலைப்பகுதிகள் சூழ்ந்த கிராமப்பகுதியான அட்சுமா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் கட்டிடங்கள் தரைமட்டமாகின. பாலங்கள் பிளவுபட்டன. சாலைகள் பெருத்த சேதம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.  

தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த வீடுகளுக்குள் சிக்கியிருந்த மக்களை மீட்பதற்காக தன்னார்வலர்கள் உள்பட சுமார் 40 ஆயிரம் பேர் இரவு-பகலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக புல்டோஸர் வாகனங்கள், மோப்ப நாய்கள் மற்றும் 75 ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், இன்றைய (திங்கட்கிழமை) நிலவரப்படி புதையுண்ட வீடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 44  ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அப்பகுதியில் மின்சார வினியோகம் இன்னும் சீரடையாததால் அந்நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டோயோட்டா தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது. #Japanquake  #Hokkaidoquake
Tags:    

Similar News