செய்திகள்
பிரிட்டனில் நடந்த நச்சுப்பொருள் தாக்குதலில் இருவர் கவலைக்கிடம்- நகரம் முழுவதும் உஷார் நிலை
பிரிட்டனில் ரஷிய உளவாளியை நச்சுப்பொருள் தாக்குதல் மூலம் சமீபத்தில் கொல்ல முயற்சி நடந்தது போல, சாலிஸ்பரி பகுதியில் இன்று ஒரு நச்சுப்பொருள் தாக்குதல் நடந்துள்ளது. #Salisbury
லண்டன்:
பிரிட்டனின் சாலிஸ்பரி நகரத்தில் இருக்கும் அமெஸ்பரி பகுதியில் நச்சுப்பொருள் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் என இருவர் கவலைக்கிடமான வகையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலை அடுத்து, சாலிஸ்பரி பகுதி முழுவதும் உஷார் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், இந்த தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் குறித்தான விபரங்களும் தெரிவிக்கப்படவில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் பிரிட்டனுக்கு உளவு பார்த்த ரஷியாவை சேர்ந்த உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் மீதும் இதே போன்ற நச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களை கொலை செய்யும் நோக்கில் ரஷியா இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷியா மீது பிரிட்டன் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.