செய்திகள்

நஜீப் ரசாக், மகாதிர் முகம்மது வெற்றி - மலேசிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கூட்டணி முன்னிலை

Published On 2018-05-09 20:52 IST   |   Update On 2018-05-09 20:52:00 IST
மலேசிய பாராளுமன்ற தேர்தலில் இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். #MalaysiaElection #rulingcoalitionlead
கோலாலம்பூர்:

222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

அனல் பறந்த பிரசாரம் முடிவடைந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் வரிசையில் நின்று பொதுமக்கள் ஓட்டு போட்டனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற ஒன்றரை கோடி மக்களில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். தற்போது வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

மலேசியாவின் உள்நாட்டு நேரமாக இன்றிரவு பத்துமணி நிலவரப்படி, மகாதிர் முகமது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பான் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்கள் 51 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர் என கோலாலம்பூரில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் மகாதிர் முகம்மது இருவருமே தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், நஜீப் ரசாக் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த போக்குவரத்து துறை மந்திரி லியோவ் டியாங், சுகாதாரத்துறை மந்திரி சுப்பிரமணியம் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆட்சி அமைக்க 112 உறுப்பினர்களின் பலம் தேவை என்னும் நிலையில் இந்த தேர்தலில் பிரதமர் நஜீப்பின் பி.என்.கட்சி நூறுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும். அதேநேரத்தில் மகாதிர் முகமதுவின் எதிர்க்கட்சி கூட்டணியும் அதிக இடங்களை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #MalaysiaElection #rulingcoalitionlead
Tags:    

Similar News