உலகம்

லெபனானில் 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து குழந்தை பலி பலர்- படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2022-06-27 05:03 GMT   |   Update On 2022-06-27 05:03 GMT
  • லெபனான் நாட்டின் வடக்கே குய்பே மாவட்டத்தில் திரிபோலி நகரில் 3 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது.
  • இந்த 3 அடுக்கு மாடி கட்டிடம் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் வீடுகள் அனைத்தும் இடிந்து தரைமட்டமாகியது. பலர் உள்ளே சிக்கி கொண்டு அபய குரல் எழுப்பினர்.

பெய்ரூட்:

லெபனான் நாட்டின் வடக்கே குய்பே மாவட்டத்தில் திரிபோலி நகரில் 3 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த 3 அடுக்கு மாடி கட்டிடம் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் வீடுகள் அனைத்தும் இடிந்து தரைமட்டமாகியது. பலர் உள்ளே சிக்கி கொண்டு அபய குரல் எழுப்பினர். இதுகுறித்த தகவல் உள்ளூர் போலீசார் மற்றும் மீட்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மீட்பு பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் குழந்தை ஒன்று பலியானது. பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டு பலத்த காயம் அடைந்தனர். கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரிய வரவில்லை.

இந்த சம்பவம் குறித்து அறிந்த லெபனான் நாட்டு பிரதமர்(பொறுப்பு) நஜீப் மிகாடி, அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் காயமடைந்த நபர்களுக்கு சரியான நேரத்தில் உரிய சிகிச்சை வழங்கும்படி உள்ளூர் மருத்துவமனைகளை கேட்டுக்கொண்டார். மேலும் மீட்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

Similar News