குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு- சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
- அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர்.
- நேற்று இரவு வரை குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையின் எதிரொலியாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர்.
இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு வருகை புரிந்தனர்.
மேலும் இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவு வரை குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் இன்று காலையில் மழை பொழிவு முற்றிலும் குறைந்து லேசான வெயில் அடித்து வருகிறது.
தொடர்ந்து பெய்த மழையின் எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.