தமிழ்நாடு செய்திகள்

பொள்ளாச்சி டாப்சிலிப்பில் மலையேற்றம்- கேரள மருத்துவர் மரணம்

Published On 2025-05-05 10:00 IST   |   Update On 2025-05-05 10:00:00 IST
  • அஜ்சல் செயின் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
  • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அஜ்சல் செயின்(வயது26).

இவர் டாக்டருக்கு படித்து முடித்து வேலைக்காக காத்திருந்தார். இவரது நண்பர் பாகில்.

இவர்கள் 2 பேரும் தமிழ்நாடு மலையேற்ற சுற்றுலா திட்டத்தின் கீழ் டாப்சிலிப் பகுதியில் மலையேற்றம் செய்வதற்கு முன்பதிவு செய்திருந்தனர். நேற்று மலையேற்றத்துக்காக பொள்ளாச்சி டாப்சிலிப்புக்கு வந்தனர்.

அதனை தொடர்ந்து பயிற்சி பெற்ற வழிகாட்டிகளான சந்தான பிரகாஷ், அஜித்குமார் மற்றும் வனத்துறையினருடன் அஜ்சல் செயினும், பாகிலும் டாப்சிலிப்பில் ஆனகரி சோலா முதல் பண்டாரப் பாறைக்கு மலையேற்றம் மேற்கொண்டனர்.

8 கி.மீ தூரம் அடர்ந்த காட்டிற்குள் மலையேற்றம் மேற்கொண்ட இவர்கள் பண்டாரப்பாறையில் இருந்து டாப்சிலிப்புக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அஜ்சல் செயின் மற்றும் பாகிலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக வனத்துறையினர் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக வேட்டைக்காரன்புதூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது அஜ்சல் செயின் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருடன் வந்த நண்பர் பாகிலை மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆனைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த அஜ்சல் செயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News