தமிழ்நாடு செய்திகள்

தென்மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

Published On 2025-04-27 11:34 IST   |   Update On 2025-04-27 11:34:00 IST
  • ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கலாம்.
  • மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும்.

தூத்துக்குடி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்தமிழக கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இந்த புதிய காற்று சுழற்சி காரணமாக 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்காசி மாவட்ட தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கலாம். மேலும் டெல்டா மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

தூத்துக்குடியை பொறுத்தவரை தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு. விருதுநகர், மதுரை மாவட்டத்திலும் மழை எதிர்பார்க்கலாம்.

சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக அம்பாசமுத்திரம், மாஞ்சோலை, கோதையாறு, சிவகிரி, புளியங்குடி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, களக்காடு, நாங்குநேரி ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும். இடி-மின்னலும் வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறினார்.

Tags:    

Similar News