தீபாவளி பண்டிகை, சட்டமன்ற தேர்தல்: சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகும் பீகார் மாநில தொழிலாளர்கள்
- தீபாவளி, சாத் பண்டிகை, சட்டமன்ற தேர்தல் ஒன்றுசேர வருகிறது.
- ஒருமாதம் விடுமுறையில் சொந்த மாநில செல்ல தயாராகி வருகிறார்கள்.
பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் நிறைந்த திருப்பூரில் பனியன் மற்றும் அதனை சார்ந்த உப நிறுவனங்களில் பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணிபுரிகின்றனர். ஆண்டு முழுவதும் திருப்பூரில் பணியாற்றும் இவர்கள் தீபாவளி, தசரா, சாத் பண்டிகை, ஹோலி உள்ளிட்ட பண்டிகைகளின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
அவ்வாறு செல்லும் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களில் 10 நாட்கள் முதல் 2 வாரம் வரை தங்கி இருந்து மீண்டும் திருப்பூர் திரும்புவது வழக்கம். அந்த வகையில் வருகிற 20-ந்தேதி தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
அவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்குள் திருப்பூர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பீகார் மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த மாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்புவது இன்னும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பீகார் மாநிலத்தில் 2 கட்டமாக நவம்பர் 6 மற்றும் 11-ந்தேதிகளில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திருப்பூரில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வந்தாலும் பீகார் தொழிலாளர்கள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் வரை பணிபுரியலாம் என கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு செல்லும் அவர்கள் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவினை செலுத்தி திருப்பூர் திரும்ப வாய்ப்புள்ளது. மேலும் சிலர் பீகார் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திருப்பூர் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.