ஒகேனக்கல் மீன் பண்ணை அருகே காவிரி கரையோரம் மணல் பரப்பில் ஓய்வெடுத்த முதலையால் பரபரப்பு
- காவிரி ஆற்றில் ராசிமணல் முதல் ஒகேனக்கல் வரை பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளது.
- வனத்துறையினர் முதலைகள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று, சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க வேண்டும்.
ஒகேனக்கல்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள அருவிகளில் குளிக்கவும், பரிசலில் சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
காவிரி ஆற்றில் ராசிமணல் முதல் ஒகேனக்கல் வரை பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றும் போது, இப்பகுதிகளில் ஆற்றில் இருக்கும் முதலைகள் தண்ணீரை விட்டு வெளியே வரும். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அடர்ந்த வனப்பகுதியில் வாழும் முதலைகள் தண்ணீரில் அடித்து வரப்படுவது வழக்கம்.
கடந்த வாரங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. வெள்ளப்பெருக்கின் போது அடித்து வரப்பட்ட முதலை ஒன்று, தற்போது தண்ணீர் குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல் மீன் பண்ணை அருகே கரையோரம் மணல் பரப்பில் ஓய்வெடுத்து வருவதை சுற்றுலாப் பயணிகள் பார்த்து, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர். இதனால் வனத்துறையினர் முதலைகள் இருக்கும் பகுதிகளுக்கு சென்று, சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க வேண்டும்.
ஆற்றை விட்டு வெளியேறும் முதலைகளை, அங்குள்ள முதலைகள் மறுவாழ்வு மையத்தில் விட வேண்டும் என வன உயிரியின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.