தமிழ்நாடு

மகன் வாங்கிய கடனுக்காக மூதாட்டியை தாக்கி நகை பறித்த கொள்ளையன்- போலீஸ் விசாரணையில் அம்பலம்

Published On 2022-12-02 10:27 GMT   |   Update On 2022-12-02 10:27 GMT
  • சாகுல் ஹமீது சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு தனது ஆதார் கார்டை ஒருவரிடம் அடமானமாக கொடுத்து கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
  • சிறிது நேரம் கழித்து வந்து அந்த நபர் பார்த்தபோது அலிமா பீவி மட்டும் தனியாக இருந்துள்ளார். நகையை கழட்டி கொடுக்குமாறு அந்த நபர் அவரிடம் கேட்டதும், அலிமா பீவி கத்தி கூச்சலிட்டுள்ளார்.

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் அண்ணா நகர் பழைய ரேசன்கடை தெருவை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் மனைவி அலிமா பீவி(வயது 69).

இவர்களது மகன் சாகுல் ஹமீது(48), கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை அலிமா பீவி வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு புகுந்த மர்ம நபர் ஒருவர், அலிமாவை தாக்கி அவரது காதில் கிடந்த 5 கிராம் தங்க கம்மலை பறித்து சென்றார்.

இதுதொடர்பாக இலத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையனை தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக அந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் அலிமா பீவியின் வீட்டுக்குள் சென்று வருவது தெரியவந்தது. அதனை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

சாகுல் ஹமீது சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு தனது ஆதார் கார்டை ஒருவரிடம் அடமானமாக கொடுத்து கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் சொந்த ஊருக்கு திரும்பிய அவர், கேரளாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையே அவருக்கு கடன் கொடுத்தவர் சாகுல் ஹமீதுவை தேடி இடைகாலுக்கு வந்துள்ளார்.

அங்கு அவரது வீட்டுக்கு சென்றபோது அலிமா பீவியும், அவரது கடைசி மகளும் இருந்துள்ளனர். அவர்களிடம் ஆதார் கார்டை காட்டி இந்த கார்டில் இருப்பது யார்? என்று விசாரித்துவிட்டு அந்த நபர் திரும்பி வெளியே சென்றுவிட்டார்.

சிறிது நேரம் கழித்து வந்து அந்த நபர் பார்த்தபோது அலிமா பீவி மட்டும் தனியாக இருந்துள்ளார். நகையை கழட்டி கொடுக்குமாறு அந்த நபர் அவரிடம் கேட்டதும், அலிமா பீவி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் அவரை தாக்கிவிட்டு நகையை பறித்து சென்றிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News