தமிழ்நாடு

முதன்மை கல்வி அதிகாரி ராமன் - பறிமுதல் செய்யப்பட்ட பணம்

விருதுநகர் கல்வி அதிகாரி வீட்டில் ரூ.3 லட்சம் சிக்கியது: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-11-08 05:13 GMT   |   Update On 2023-11-08 05:13 GMT
  • ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கு லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனையிட வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
  • பணியிட மாறுதல் பெறும் சமயத்தில் லஞ்ச ஒழிப்பு வழக்கில் கல்வி அதிகாரி சிக்கி இருப்பது ஆசிரியர்களிடமும், கல்வியாளர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமன். இவர் சென்னைக்கு அரசு தேர்வு வாரிய இணை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பு 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் பணியிட மாறுதல் பெற்று சென்னை செல்லும் ராமனுக்கு நேற்று விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பிரிவு உபசார விழா நடந்தது.

இதில் கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிந்து இரவு 9 மணியளவில் ராமன் மற்றும் அவரது உதவியாளர்கள் இருந்தனர். அப்போது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன், சால்வன்துரை ஆகியோர் தலைமையில் போலீசார் திடீரென அலுவலகத்திற்கு வந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராமன், போலீசாரிடம் விவரம் கேட்டார். அப்போது ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கு லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனையிட வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த புகாரை ராமன் மறுத்தார். போலீசார் தொடர்ந்து அலுவலகத்தை சோதனையிட்டனர்.

அப்போது முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளரும், பட்டம்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான சிறு செல்வராஜை சோதனையிட்டபோது அவரிடம் கணக்கில் வராத ரூ.13 ஆயிரம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இரவு முழுவதும் முதன்மை கல்வி அலுவலர் ராமன், நேர்முக உதவியாளர் சிறு செல்வராஜ், இளநிலை உதவியாளர் சாணக்கியன் ஆகியோரை போலீசார் அலுவலகத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள மார்டன் நகரில் உள்ள ராமன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பீரோவில் ரூ.3 லட்சம் ரொக்கம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதற்கான உரிய கணக்கும் முதன்மை கல்வி அதிகாரியிடம் இல்லை.

விருதுநகர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் பெற்று தர முதன்மை கல்வி அதிகாரி லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. அண்மையில் சிவகாசியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் பெற்று தர தலா ரூ.3 லட்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

இதற்கு உடந்தையாக சிறு செல்வராஜ், சாணக்கியன் ஆகியோர் இருந்துள்ளனர். பணம் சிக்கியது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமன் உள்பட அவரது உதவியாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணியிட மாறுதல் பெறும் சமயத்தில் லஞ்ச ஒழிப்பு வழக்கில் கல்வி அதிகாரி சிக்கி இருப்பது ஆசிரியர்களிடமும், கல்வியாளர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News