தமிழ்நாடு

அர்னவ் - திவ்யா

விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய போலீசார்- நடிகர் அர்னவ் தலைமறைவு?

Published On 2022-10-13 05:27 GMT   |   Update On 2022-10-13 05:27 GMT
  • நடிகர் அர்னவுக்கும், நடிகை திவ்யாவுக்கும் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
  • கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

சென்னை:

பிரபல சின்னத்திரை நடிகர் அர்னவ். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் நடித்து வந்தார். அதே தொடரில் நடிகை திவ்யாவும் நடித்து வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் நடிகர் அர்னவுக்கும், நடிகை திவ்யாவுக்கும் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி அடுக்கடுக்கான புகார்களை கூறி வருகிறார்கள். மேலும் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

கர்ப்பிணியான தன்னை அர்னவ் அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு நடிகையுடன் தொடர்பு வைத்து இருப்பதாகவும் திவ்யா குற்றம்சாட்டினார்.

ஆனால் அர்னவ் கூறும்போது, எனது மனைவி திவ்யா எனக்கு வேண்டும். திவ்யாவுடன் இருப்பவர்கள் தான் அவரை இதுபோல் செயல்பட தூண்டுவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் மகளிர் போலீசார் அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக அர்னவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போரூர் மகளிர் போலீசார் அழைத்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து நாளை (வெள்ளிக்கிழமை) இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நடிகர் அர்னவுக்கு போரூர் மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் நடிகர் அர்னவ் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் நாளை விசாரணைக்கு ஆஜராவாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News