தமிழ்நாடு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: பரிசல் இயக்க 3-வது நாளாக தடைவிதிப்பு

Published On 2023-08-18 05:17 GMT   |   Update On 2023-08-18 05:17 GMT
  • நீர் வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரு தினங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வண்ணம் உள்ளது.
  • தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்:

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் இந்த இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடிக்கு மேல் தமிழக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.

இந்த நீரானது கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று கர்நாடகா அணைகளில் இருந்து மேலும் நீர்வரத்து அதிகரித்து 22 ஆயிரம் கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.

இந்த நீர் வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த இரு தினங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வண்ணம் உள்ளது.

நேற்று 12,500 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து தண்ணீர் வந்தது.

நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க இன்று 3-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

Tags:    

Similar News