சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நீர்மட்டம் கடந்த ஆண்டைவிட குறைவு
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் தற்போது 80 சதவீதத்திற்கும் அதிகமான நீர் இருப்பு உள்ளது.
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியில் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 935.2 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் தற்போது 80 சதவீதத்திற்கும் அதிகமான நீர் இருப்பு உள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. இதனால் 22 ஆயிரம் கன அடி வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கத்தில் 1,865 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. புழல் அதன் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் தற்போது 2624 மில்லியன் கன அடி உள்ளது. செம்பரம்பாக்கம் அதன் முழு கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 2635 மில்லியன் கன அடி உள்ளது. கடந்த ஆண்டைவிட 15 மில்லியன் கன அடி தண்ணீர் குறைவாக உள்ளது. சோழவரத்தில் கடந்த ஆண்டு 781 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது, ஆனால் தற்போது 417 மில்லியன் கன அடியாக உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் முழு அளவில் 500 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இதில் கடந்த ஆண்டைப் போலவே சேமிப்பு உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியில் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 935.2 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது.
ஆனால் தற்போது 679.2 மில்லியன் கன அடி தண்ணீரே உள்ளது. இந்த 6 ஏரிகளில் நீர் இருப்பு தற்போது 8769 மில்லியன் கன அடியாக உள்ளது.
தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் ஏரிகளில் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.